புதுடில்லி, டிச.15 மக்களவையில் 2 இளைஞர்கள் அத்துமீறி நுழைந்து வண்ணப் புகை குப்பிகளை வீசிய விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று (14.12.2023) கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்க மிட்டனர். இதுதொடர்பாக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மக்களவை நேற்று (14.12.2023) காலை 11 மணிக்கு கூடியதும், நாடாளுமன்றத் தாக்குதல் நிகழ்வு குறித்து பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். 2 இளைஞர்களுக்கு பாஸ் வழங்கிய பாஜக எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர். இதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். “நடந்த நிகழ்வு வாய்ப்புக் கேடானது. அவையில் இதுபோல குழப்பம் ஏற்படுத்தக்கூடிய நபர்களுக்கு அனு மதிச் சீட்டு வழங்குவதை அனைத்து உறுப் பினர்களும் தவிர்க்க வேண்டும். சம்பவம் குறித்து ஏற்கெனவே விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது” என்றார்.நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்புக்கு மக்களவை செயலகமே பொறுப்பு என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரி வித்தார்.
எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். அவையின் மய்யப் பகுதிக்கு வந்துஅமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை பிற்பகல் 2 மணி வரை மக்களவைத் தலைவர் ஒத்திவைத்தார். அவை மீண்டும் கூடியதும், ஒன்றிய அரசு சார்பில் ஓர் அறிக்கையை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வாசித்தார். நாடாளுமன்றத்தின் உட்புற பாதுகாப்பு, மக்களவைத் தலைவரின் கட்டுப்பாட்டின்கீழ் வருவதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து, 5 நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை அவர் கொண்டுவந்தார். இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
இதன்படி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டிஎன்.பார்த்திபன், ஹிபி ஈடன், டீன் குரியகோஸ், ரம்யா ஹரிதாஸ், எஸ்.ஜோதிமணி ஆகிய 5 உறுப் பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட தால், அவை பிற்பகல் 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
அவை மீண்டும் கூடியதும், அமைச்சர் ஜோஷி மற்றொரு தீர்மானத்தை முன்மொழிந்தார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த
வி.கே.மணிகண்டன், பென்னி பெஹனன், முகமது ஜாவேத், மாணிக்கம் தாகூர் ஆகிய 4 எம்.பி.க்கள், திமுகவை சேர்ந்த கனிமொழி, எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகிய 2 பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.ஆர்.நடராஜன், கே.சுப்ப ராயன் ஆகிய இருவர், மார்க்சிஸ்ட் கட்சியின்சு.வெங்கடேசன் என 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப் பட்டனர்.
வராத நாடாளுமன்ற உறுப்பினரும் நீக்கம்
இந்நிலையில், திமுக எம்.பி.பார்த்திபன் நேற்று (14.12.2023) டில்லியிலேயே இல்லை. சென்னையில் தான் இருந்தார். ஆனால், அவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று பின்னர் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து, எஸ்.ஆர்.பார்த்திபனின் பெயர் தவறுதலாக இடம் பெற்றுவிட்டதாகக் கூறி அவருக்கு எதிரான இடைநீக்க உத்தரவை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா திரும்பப் பெற்றார்.
மாநிலங்களவையிலும் இப்பிரச்சினை எதிரொலித்தது. திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், அவைத் தலைவர் தன்கரின் முன்னால் உள்ள பகுதிக்குச் சென்று கைகளை உயர்த்தி ஏதோ கூறினார். இதனால் கோபமடைந்த தன்கர், பிரையனை அவையை விட்டு வெளியேறுமாறு கூறினார். பிரையனின் நடத்தை முற்றிலும் தவறானது என கண்டித்தார்.
பிறகு பிரையனும் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டார். மாலை 4 மணிக்கு அவை மீண்டும் கூடியதும், இடைநீக்கம் செய்யப் பட்ட டெரிக் ஓ பிரையன் அவையை விட்டு வெளியேறுமாறு ஜகதீப் தன்கர் கேட்டுக் கொண்டார். ஆனால் அவையை விட்டு பிரையன் வெளியேறவில்லை. இதையடுத்து, இந்தப் பிரச்சினையை விதி எண் 192 இன் கீழ் உரிமைக் குழுவுக்கு அனுப்ப அமைச்சர் பியூஷ் கோயல் தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானம் நிறைவேறியதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை மாநிலங்களவை உரிமைக் குழு விசாரித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்கும் என தன்கர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவையை நாள் முழுவதும் அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஒத்திவைத்தார்.