புதுடில்லி,நவ.29- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் நடந்த ஸநாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது, ஸநாதனம் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் பங்கேற்று இருந்தார்.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் இந்து அறநிலையத்துறை அமைச்சரே பங்கேற்றதற்கும், ஸநாதன தர்மத்தை ஒழிப்பதாக உதயநிதி பேசியதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இவரது பேச்சு அரசமைப்பு சாசனத்திற்கு எதிரானது, சிபிஅய் விசாரிக்க வேண்டும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெகன்நாதன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஸநாதன சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், ஸநாதன எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது தொடர்பாக தமிழ்நாடு அரசும் பதிலளிக்க தாக்கீது பிறப்பித்து உத்தரவிட்டு இருந்தனர்.
இந்நிலையில், இன்று இவ்வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்று கூறி உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது.