‘தினமலரே கூடக் கொந்தளிக்கிறது சமூக வலைதள செய்திகளை தணிக்கை செய்வதா? இந்திய செய்தித்தாள் சங்கம் எதிர்ப்பு!

Viduthalai
3 Min Read

புதுடில்லி, ஜன.26  ஒன்றிய அரசு குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மை தன்மையை கண்டறியும் பொறுப்பு, ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல் படும் பி.அய்.பி., எனப்படும் பத்திரிகை தகவல் நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. இதற்காக, தகவல் தொழில் நுட்ப சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ள ஒன்றிய அரசு திட்ட மிட்டிருப்பதற்கு, அய்.என்.எஸ்., எனப்படும், இந்திய செய்தித்தாள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஒன்றிய அரசின் கொள்கைகள், நிகழ்ச்சிகள், திட்டங்கள், சாதனைகள், அறிக்கைகள் உள்ளிட்டவற்றை, பி.அய்.பி., வாயிலாக, அச்சு, காட்சி மற்றும் ‘டிஜிட்டல்’ ஊடகங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. இந்த நிறுவனம், ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச் சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இது அதிகாரப்பூர்வமாக வழங்கும் செய்திகளை அனைத்து ஊடகங்களும் வெளியிட்டு வருகின் றன. இந்நிலையில், ஒன்றியஅரசு குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான பொய் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதன் உண்மை தன்மையை கண்டறிய, தெளிவான நடைமுறை பின்பற்றப் படுவதில்லை. அதனால், பொய் யான தகவல்கள் மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருவதாக, பல ஆண்டுகளாகவே புகார் கூறப்பட்டு வருகிறது. 

இந்த பொய் செய்தி விவகாரத் துக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஒன்றிய அரசு பல்வேறு நடைமுறைகளை பரிசீலித்து வந்தது. இதையடுத்து, தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தம் மேற்கொள்ள, ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த திருத்தத்தின் படி, ஒன்றிய அரசு குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மை தன்மையை ஆராய்ந்து உறுதி செய்யும் பொறுப்பை பி.அய்.பி.,க்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கடுமையாக பாதிக்கும்

இதற்கான வரைவு முன் மொழிவை ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது.இதற்கு, இந்திய செய்தித்தாள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய அரசு தொடர்பான செய்திகளின் உண்மை தன்மையை கண்டறிந்து அதை கட்டுப்படுத்தும் பொறுப்பை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனத்துக்கு வழங் குவது முறையாக இருக்காது. இந்த முடிவு, இந்திய ஊடகங்களின் செயல்பாடுகளை கடுமையாக பாதிக்கும். இது, ஒன்றிய அரசின் கொள்கைகள், செயல்பாடுகள் குறித்து எழுதப்படும் நேர்மையான விமர் சனங்களை இருட்டடிப்பு செய்யப்படும் வாய்ப்பை ஏற்படுத்தி விடும். எனவே இந்த முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.

விவாதிக்க முடிவு 

சமூக வலைதளங்களில் வெளியா கும் செய்திகளின் உண்மை தன்மையை கண்டறிய வேறு விதமான நடைமுறைகளை ஒன்றிய அரசு கையாள வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊடகத் துறையினருடன் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஒன்றிய தகவல் தொழில் நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் செய்தியாளர் களிடம்  கூறியதாவது:தனி நபர் தரவுகள் பாதுகாப்பு சட்டம் தொடர்பான ஆலோசனை முடிவ டைந்து, ஒன்றிய அரசின் பரிசீல னையின் கீழ் உள்ளது.  இது தொடர்பான அறிவிக்கை விரை வில் வெளியாகும். ‘ஆன்லைன்’ விளையாட்டுக்களை ஒழுங்கு முறைபடுத்துவது குறித்த அறி விக்கை இம்மாதம் 31இல் வெளி யாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைதள செய்திகள் தொடர்பான உண்மை கண்டறியும் பொறுப்பு, பி.அய்.பி.,யிடம் வழங்க சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களுடன் அடுத்த மாத துவக்கத்தில் தனியாக விவாதிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

– தினமலர்  – 25.1.2023

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *