சென்னை செப். 12- நேபாள வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 அதிகாரிகள் காத்மாண்டுவில் முகாமிட்டுத் தேடுதல் பணிகளை கண்காணித்து வருவதாகவும் தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில், தமிழ்நாட்டிலிருந்து ‘கைலாசத்திரை’ மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்டோர் காணாமல் போயினர். அவர்களின் விவரங்களை உறவினர்களுக்கு தெரிவிக்கவும், மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் உத்தரவிடக் கோரி, திண்டுக்கல்லை சேர்ந்த பர்வேஷ் முஷ்ரப் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வில் 10.9.2026 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய, மாநில அரசுகள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதுவரை 75 பேரின் குடும்பத்தினரிடம் மரபணு மாதிரிகள் பெறப்பட்டு, அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தமிழ்நாட்டிலிருந்து சென்ற 3 அதிகாரிகள் காத்மாண்டுவில் முகாமிட்டு தேடுதல் பணிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தேடுதல் பணிகளில் அடுத்த கட்ட முன்னேற்றம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
