வரும் செப்டம்பர் 17, உலகத் தலைவர் தந்தை பெரியாரின் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை வெகு சிறப்பாகக் கொண்டாட திட்ட மிட்டு விட்டீர்களா தோழர்களே? செப்டம்பர் 3ஆம் தேதி திராவிடர் கழகத் தலைமைச் செயற் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீண்டும் ஒரு முறை படியுங்கள்! படியுங்கள்!!
தந்தை பெரியார் பட ஊர்வலம், நடை, ஓட்டம் (Walk And Run) இவற்றிற்குக் காவல் துறையிடம் அனுமதி எழுதிக் கொடுத்து விட்டீர்களா? இனிப்புகள் வழங்குவதற்கு உங்கள் இலக்கையும், தொகையையும் தலைமைக் கழகத்திற்கு (செப்டம்பர் 10க்குள்) அனுப்பி வைத்து விட்டீர்களா? குடும்ப விருந்து, பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு முன்னேற்பாடுகளைச் செய்து விட்டீர்களா? பண்பாட்டுப் பாதுகாப்புப் பெரு விழாதான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள்!
தமிழன் இல்லம் என்பதற்கு அடையாளம் ‘விடுதலை’ என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார். ஆம், தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் – தந்தை பெரியாரால் மான வாழ்வும், உரிமையும், சுயமரியாதையும் பெற்றோம் என்பதற்கு அடையாளமாக ஜாதி, மதம், அரசியலை எல்லாம் கடந்து தந்தை பெரியார் பிறந்த நாள் இனக் கொண்டாட இன்பத் திருநாள் ஒளியாக தமிழன் வீடெல்லாம் ஒளிரட்டும்! ஒளிரட்டும்!! அலைப்பேசி மூலம் வாழ்த்துப் பரிமாற்றங்கள் நடக்கட்டும்! நடக்கட்டும்!! புத்தாடை பூணுவீர்! சிறப்பாக குழந்தைகளுக்குப் புத்தாடை அணிவிப்பீர்!
வெடி வேண்டாம் – வேடிக்கை வேண்டாம்! புது சகாப்தம் தொடங்கும் புரட்சிப் பொன்னாள் பூத்துக் குலுங்கட்டும்!
ஆயத்தமாவீர்! ஆயத்தமாவீர்!!
தமிழினத் திருநாள் தந்தை பெரியார் பிறந்தநாளைக் கொண்டாட ஆயத்தமாகி விட்டீர்களா தோழர்களே?
Leave a Comment
