இந்திய நாட்டின் சமூகப் புரட்சியின் முதன்மை யானவர்கள்
- ஜோதிபா பூலே (மராத்திய மாநிலம்)
- சத்ரபதி சாகுமன்னர்
- ஆசான் நாராயண குரு
- தந்தை பெரியார்
- பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர்.
(முதன் முதலில் இப்படி வரிசைப்படுத்தியவர் பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனரும் என்றும் தடம் மாறாத தனிப் பெரும் அரசியல் சமூகப் புரட்சியாளருமான நண்பர் கான்ஷிராம் அவர்கள்)
இதில் இந்த அய்ம்பெரும் புரட்சியாளர்களில் தந்தை பெரியார் ஒருவர்தான் மதம் எதிலும் சாராது, மதங்களையும் எதிர்த்தவர் என்பது முக்கியமாகச் சிந்திக்க வேண்டியது.
ஜோதிபா பூலே அவர்கள் முன்னோடியாக, சமூகநீதிப் போராளியாக ஒடுக்கப்பட்டோருக்கு முதல் அறிவூட்டிய மாமனிதர் ஆவார்.
அவரது சிறப்பினை இவ்வாண்டு நவம்பரில் நாம் சிறப்பாக நடத்தவிருக்கிறோம்.
அய்வரில் ஒருவர் கேரளத்து அமைதிப் புரட்சியாளர் சிறப்புமிகு ஆசான் நாராயணகுரு. ஒடுக்கப்பட்ட மக்கள், குறிப்பாக அவர் சார்ந்த ஈழவ மக்கள் உரிமை பறிக்கப்பட்டதையும், கல்வி சமத்துவ வாய்ப்புகளையும் அவர்களுக்கு அறவே மறுத்தும் வந்ததையும் கோயிலுக்குச் சென்று கடவுளை கும்பிட உரிமை இல்லை என்றும், அவர்களைத் தீண்டாமை, நெருங்காமை, பார்க்காமை என்ற காட்டுமிராண்டி காலத்திலும் காண முடியாத ஒரு பெரும் பேத – ஜாதிப் பிரிவை உண்டாக்கி செய்ததையும் ‘வாயில்லா ஜீவன்களாக’ அடங்கி ஏற்றுக் கொண்ட மலையாள நாட்டுப் பகுதியில், அதை எதிர்த்துப் புரட்சி வெடி வைத்தவர் கேரளத்தில் ஆசான் நாராயண குரு அவர்கள்!
அவர்கள் பற்றியும் அவர் துவக்கி வளர்த்துள்ள ‘தர்மபரிபாலன சபை’ அமைப்பு பற்றியும், அதை வார்த்த அவர்தம் அருமைச் சீடர்கள் டாக்டர் பல்பு, குமரன் ஆசான் ஆகியோர் பற்றியும் இதுவரை எத்தனையோ நூல்கள் வந்திருந்தாலும் அண்மையில் ‘தெற்கின் புத்தர் – ஆசான் நாராயண குரு’ என்ற ஓர் ஆய்வு நூலை – மதுரை திருவாளர் தமிழன் இளங்கோ அவர்கள் மிக மிக ஆர்வத்துடன், இதுவரை பலரும் அறிந்திராத, அரிய தகவல்களைத் திரட்டி 724 பக்கங்களில் அருமையான ஒரு சமூக வரலாற்று நூலாக எழுதியுள்ளார். அனைத்து சமூக நீதியாளர்களும் நூலாசிரியரைப் பாராட்டிப் பெருமைப்படுத்த வேண்டும்.
இதற்காக அவரது கடும் உழைப்புக்கும், திரட்டிய தகவல்களுக்கும் ஓர் ஆய்வு முனைவர் பட்டமே தரலாம். தரத் தகுதியான ஆய்வு நூல். ‘கேரளம்’ ஆகியுள்ள அந்த மாநிலத்தில் பல கிராமங்கள் உட்பட சென்று தரவுகளைத் திரட்டி, பலரையும் பேட்டி கண்டு, தனி ஒரு மனிதராக இதனைச் செய்ய முடியுமா என்றால் ‘முடியும் – முயன்றால்’ என்பதை விடையாகத் தந்துள்ளது – இந்த அறிவு ஒளி வீச்சு!
பகுத்தறிவாளர்கள், சுயமரியாதை எழுத்தாளர்கள், பகுத்தறிவுப் பாலவர் கவிஞர் அறிவுமதி, தவத்திரு பால பிரஜாபதி அடிகளார், ‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சியின் செய்திப் பிரிவுத் தலைவர் ‘செறிஞர்’ (செறிவான கருத்துகளை எழுதுபவர்) ப. திருமாவேலன், முற்போக்குச் சிந்தனையாளர் வாலாசா வல்லவன் ஆகியோரது அறிவுரைகள், அணிந்துரைகள், கருத்துரைகள், பாராட்டுரைகள் கொண்ட இந்த நூலை ஒரு சமூக வரலாற்று நூலாக எழுதி, நாராயண குருவை முற்றிலும் ஒரு சமூகப் புரட்சியாளராக, சரியானபடி இந்நூலில் தமிழன் இளங்கோ சிறப்புடன் காட்டியுள்ள பாங்கு அவரது தனித்த சிறப்புமிகு சிந்தனை ஓட்டத்தையே காட்டுகிறது.
மதத் தலைவர், மடங்களில் வாழும் – பூசை புனஸ்காரங்கள் நிலைக்கு மாறுபட்டு, எழுத்தோவியத்தில் பல தகுந்த தரவுகளுடன் பயணத்தில் பலரை சந்தித்துத் திரட்டிய செய்திகளை வைத்து எழுதியுள்ளார்.
‘திறவுகள்’ என்று தலைப்பிட்டு ஏழு பிரிவுகளில் அரிய தகவல் களஞ்சியமாகியுள்ளார்.
‘திறவு 3’இல் வைக்கம் போராட்டம் துவக்கி தந்தை பெரியார், காமராசர் பலவற்றை அவர் ஒரு வகை தனித்த பார்வை திரட்டித் தரும் கருத்துகள் மிக குறிப்பிடத்தக்கவையாகும். அரிய முக்கியத்துவம் வாய்ந்த மற்ற வரலாற்றலாளர்கள்பற்றி மறந்தோ மறைத்தோ விட்ட செய்திகள் அவை.
‘‘நூலைப்படி, நூலைப்படி’’ என்று ஆணையிட்ட நமது புரட்சிக் கவிஞர் ஆணையை ஏற்று இந்த அரிய நூலைவாங்கிப் படிப்போம் – அக்கருத்தொளியை அனைவருக்கும் சேர்ப்போம்.
மிகுந்த பாராட்டுகள் – நூலாசிரியர் மானமிகு தமிழன் இளங்கோ அவர்களுக்கு!
