வேலூர், ஆக. 26- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் ஆர்.அய்.சி.டி. கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் “போதையில்லா சமுதாயத்தை உருவாக்குவோம்” என்ற கருத்தரங்கம் 25-08-2026, அன்று காலை 10 மணிக்கு காந்திநகர், வேலூரில் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆர்.அய்.சி.டி. கல்வி நிறுவன இயக்குநர் கே.எஸ்.அஷ்ரப் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத் தலைவர் பி.தனபால் இணைப்புரை வழங்கினார்.
இந்நிகழ்வில் இ.தமிழ்தரணி (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்), கு.இளங்கோவன் (மேனாள் மாவட்டச் செயலாளர்), மு.பிரகாசம் (குடியாத்தம் ப.க.நகரச் செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன்பரசன் தொடக்க உரையாற்றுகையில், “தந்தை பெரியார் அவர்கள் கடவுள் மறுப்பை மட்டும் பேசாமல், சமுதாயத்தில் ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு ஒழுக்கத்துடனும், மானம், அறிவோடும் வாழ வேண்டும் என்பதைத் தமது வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்தார். குறிப்பாக பெண் கல்வி, ஆணுக்குப் பெண் சமம், பொருளாதாரப் பாதுகாப்பு ஆகியவை குறித்து வலியுறுத்தி எழுதியுள்ளார்” என்று மாணவர்களிடையே குறிப்பிட்டுப் பேசினார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்ட அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை, குடியாத்தம் மாவட்ட மனநல மருத்துவர், ப.சிவாஜி ராவ் சிறப்புரையாற்றுகையில், “போதைப் பொருட்கள் மனித உடலின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதித்து, கடுமையான உடல்நலக் கேடுகளை ஏற்படுத்துகின்றன. போதைப் பழக்கம் தனிநபரை மட்டுமல்லாமல், அவரது முழு குடும்பத்தையும் பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கிறது. ஆகவே, போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். இறுதியாக செவிலியர் துறை ஆசிரியர் ரீட்டா வான்மலர் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வில் எழுபதுக்கும் மேற்பட்ட செவிலியர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
