இன்றைக்கு வீட்டுக்கு வீடு டாக்டர்கள், பட்டதாரிகள் நம்மினத்தில் இருப்பதற்கு யார் காரணம்?
திராவிட இயக்கத்தின் மகத்தான சாதனையே!
திராவிட இயக்கத்தின் மகத்தான சாதனையே!
சென்னை, ஆக.24 இந்த விழாவில் மணமக்களாக இருக்கும் இருவரும் டாக்டர்கள். இப்படி வீட்டுக்கு வீடு டாக்டர்கள், பட்டதாரிகள் நிறைந்திருப்பதற்குக் காரணம், திராவிட இயக்கத்தின் மகத்தான சாதனை என்றார் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்.
அவரது உரை வருமாறு:
இங்கே சகோதரர் ஆ. இராசா அவர்கள், இன்றைக்கு நாடு எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். நான் அதிகமாக அந்தப் பிரச்சினைக்குப் போக விரும்பவில்லை; அரசியலாக்க விரும்பவில்லை. இது ஒரு குடும்ப விழாவாக இருக்கிற காரணத்தால் நான் அதிகம் அரசியலுக்குச் செல்ல வில்லை.
ஆனால், ஒன்றை எண்ணிப் பாருங்கள்! இன்றைக்கு அமிர்தம் அவர்களுடைய மகளாக இருந்தாலும், மாப்பிள்ளையாக இருந்தாலும் இரண்டு பேரும் டாக்டர்கள். இன்றைக்குப் பேத்தி இலக்கியாவுக்குத் திருமணம்; அவரும் டாக்டர். அவர் மணமகனாகக் கரம் பிடித்திருக்கக்கூடிய கிரிதரா, அவரும் டாக்டர்! ஆகவே, ஒரு டாக்டர் குடும்பத்தில் நடைபெறக்கூடிய திருமணம் இது. டாக்டர்கள் சேர்ந்து ஒன்றாக இருக்கக்கூடிய குடும்பத்தில் நடைபெறக்கூடிய திருமணமாக இந்தத் திருமணம் நடந்து கொண்டிருக்கிறது.
‘திராவிட இயக்கம்’ என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது!
ஒன்றை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். அரை நூற்றாண்டுக்கு முன்னால் பார்த்தால், அத்தி பூத்தாற்போலதான் ஒரு டாக்டரோ அல்லது பட்டதாரியோ இருப்பார்கள். ஆனால், இன்றைக்கு ஊருக்கு ஊர், கிராமத்திற்கு கிராமம், வீட்டிற்கு வீடு பட்டதாரிகளும், மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்று சொன்னால், அதற்குக்காரணம் ‘திராவிட இயக்கம்’ என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது!
அப்படிப்பட்ட திராவிட இயக்கத்தின் வழித்தோன்ற லாக, திராவிட முன்னேற்றக் கழகப் பரம்பரைக் குடும்பத்தில் நடைபெறும் திருமணமாக இந்தத் திருமணம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இந்த நிலை வருவதற்கு யார் காரணமாக இருந்தார்கள் என்பதை இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்; தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குப் புரியவில்லை, தெரியவில்லை. அதனால்தான் இராசா சொன்னதுபோன்று, ஒரு மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்பட்டு, அது ஏமாற்றமாக மாறியிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு, கோடிக்கணக்கான மக்களை இன்றைக்குத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.
எனவே, இந்த நிலை மாறுவதற்கு, இந்த மண விழாவில் கலந்துகொண்டிருக்கக்கூடிய நீங்கள், வரக்கூடிய காலகட்டங்களில் சிறப்பான வகையிலே சிந்தித்துப் பார்த்துச் செயல்பட வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.

