தொடரும் காவல் நிலைய மரணங்கள், உச்சநீதிமன்ற, இதர நீதிமன்ற அறிவுறுத்தல்கள் என்ன ஆனது?
மதுரை, ஆக. 18- சிந்தாமணி காவல் நிலையத்தில் விசார ணைக்கு அழைத்துச் செல்லப் பட்ட பூசாரி ஒருவர், காவல் துறையினரால் பூட்ஸ் கால்களால் தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உயிரிழப்பதற்கு முன் அவர் பதிவு செய்த மரண வாக்குமூலக் காணொலிப் பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் பரமசிவம் (52), பூசாரி. இவருக்கும் அவரது பக்கத்து வீட்டாருக்கும் இடையே வாகனம் நிறுத்துவது தொடர்பாக எழுந்த தகராறில், கடந்த மாதம் இரு தரப்பினரும் சிந்தாமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் 19ஆம் தேதி விசாரணைக்காக பரம சிவத்தைக் காவலர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவரை காவல் துறையினர் கைகளாலும், பூட்ஸ் கால்களாலும் தலையில் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் நிலைகுலைந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர்.
உயிரிழப்பும்,
மரண வாக்குமூலமும்!
வீடு திரும்பிய பரமசிவத்திற்குத் தொடர் தலைவலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனையில் அவரது மூளையின் உள்பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
அரசு மருத்துவமனையிலும், பின்னர் தனியார் மருத்துவ மனையிலும் தீவிர சிகிச்சை பெற்று வந்த பரமசிவம், சிகிச்சை பலனின்றி பரிதாப மாக உயிரிழந்தார்.
அவர் உயிரிழப்பதற்கு முன் பதிவு செய்த காணொலிப் பதிவில், “காவல் துறையினர் என்னை கடுமையாகத் தாக்கி னார்கள். என் உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்குப் காவல் துறையினரே பொறுப்பு. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பேசியுள்ளார். இந்தக் காணொலிப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
பரமசிவம் சாவுக்குக் காரணமான காவல் அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அவரது மனைவி அய்யம்மாள் முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையருக்குப் புகார் மனு அனுப்பியுள்ளார்.
காவல்துறை மறுப்பு – விசாரணை:
இக்குற்றச்சாட்டைக் காவல்துறை தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது. “பரமசிவம் தாக்கப் படவில்லை. அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டார்.
வீட்டில் தடுமாறி கீழே விழுந்ததாலேயே அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட் டுள்ளது. அவர் உடற்கூராய்வு அறிக்கை மற்றும் ஆர்டிஓ (RTO/RDO) விசாரணையின் முடிவிலேயே உண்மை நிலை தெரியவரும்” எனப் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல் நிலைய மரணங்களைத் தடுக்க உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் பல்வேறு கடுமையான வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து புகாராக எழுவது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.
