இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் தொடரும் கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட் டுள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் 118 சாலைகள் போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளதாக அவசரகால செயல்பாட்டு மய்யம் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தொடர் மழை மற்றும் மோசமான வானிலை நிலவுவதைக் கருத்தில் கொண்டு, சிம்லா, காங்ரா, குளு, மண்டி மற்றும் சோலன் உள்ளிட்ட அய்ந்து மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மய்யம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்றும், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு
12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல், ஆக.17 காவிரி மேலாண்மை வாரியம் கடந்த 15-ஆம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட கருநாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, கபினி அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 298 கனஅடி தண்ணீரும் என மொத்தமாக 12 ஆயிரத்து 298 கன அடி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று (16.8.2026) காலை 6 மணி நிலவரப் படி வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியானது. இரவு 9 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்தது.
இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து இன்று (17.8.2026) காலை நிலவரப்படி வினாடிக்கு 12,500 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் அய்ந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் ஒன்றிய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

