போபால், ஆக. 15- மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ரவுலி மாவட்டம், சித்ரங்கி பகுதியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘ தேசியக்கொடி பேரணி நிகழ்வின் போது பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் நிலவியுள்ளது.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராதா சிங்கின் வருகைக்காக சித்ரங்கி பகுதியில் உள்ள 8 பள்ளிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் சுமார் 6 கிலோமீட்டர் தூரம் வரை நடக்க வைக்கப்பட்டனர் மேலும், கொளுத்தும் சுட்டெரிக்கும் வெயிலில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகள் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர்.
பேரணியில் பங்கேற்ற குழந்தைகளுக்குப் போதுமான குடிநீர் மற்றும் உணவு வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக கடுமையான நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் 12 மாணவர்கள் நிலை குலைந்து மயங்கி விழுந்தனர்.
மயக்கமடைந்த மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் ஆனால் அங்கு ஆக்ஸிஜன் உருளைகள் காலாவதியாகியதால் அவர்களூக்கு போதுமான முதலுதவி சிகிச்சை அளிக்கப்படாமல் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்று அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
சுய அரசியல் விளம்பரத்திற்காகவும் பேரணி ஆடம்பரத்திற்கா கவும் பள்ளி குழந்தைகளின் உயிரைப் பணயம் வைத்து, கொளுத்தும் வெயிலில் அவர்களை அலையவிட்ட மக்கள் பிரதிநிதி மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்களின் இந்த அலட்சியமான செயலுக்குச் சமூக ஆர்வலர்களும் பெற்றார்களும் தங்களின் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
