பெரம்பூர்,மார்ச் 10- சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் மேற்கு பகுதி திமுக சார்பில் “ வென்று நிலைத்திருக்கும் என்றும் நல்லிணக்கம்” என்ற தலைப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கொளத்தூர் அகரம் சந்திப்பில் 8.3.2023 அன்று மாலை நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு கொளத்தூர் மேற்குப் பகுதி செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அற நிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சி.பி.அய் மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன், கலாநிதி வீராசாமி எம்பி, சட்டமன்ற மேனாள் உறுப்பினர் ப.ரங்கநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேசியதாவது:
இந்தியாவின் அரசியல் நிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூர்ந்து கவனிக்கிறார். தொடர்ந்து நல்ல முடிவுகளை எடுக்கிறார். ஒரு விஷயத்தை நிதானமாக அணுகும் திறன் படைத்தவர் முதலமைச்சர். 2 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை விட அதிகமாக தமிழ்நாடு மக்களுக்கு செய்துள்ளார்.
ஜனநாயகத்தில் ஆட்சி மாற்றம் சகஜம்தான். ஆனால் இந்திய சமூகத்தின் 5000 ஆண்டுகால சக்கரத்தை பின்னோக்கி செலுத்துகிறார்கள் பிஜேபி. தீண்டாமை, வறுமை, வர்ண பாகுபாடு என்று அனைத்தையும் மீண்டும் நிலைப்படுத்த பார்க் கிறார்கள்.
எங்களது கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல. கொள்கைகள் வேறு தான், வரலாறும் வேறு தான், ஆனால் மதச்சார்பின்மை என்ற நேர்கோட்டில் ஒன்று படுகிறோம். பாஜகவின் பிரிவினைவாதம் விளம்பரத் திற்குத்தான் எடுபடும். ஆனால் தமிழ்நாட்டில் அது எடுபடாது.
-இவ்வாறு அழகிரி பேசினார்.