சென்னை, மார்ச் 12- தண்டையார்பேட்டையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், வண்ணைநகர் தொகுதி மேனாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜீவாவின் பெயரில் செயல்பட்டு வந்த பூங்கா மற்றும் அவரது சிலை ஆகியவை வட சென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.92 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டன. இவை நேற்று முன்தினம் (10.3.2023) திறக்கப்பட்டன. இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு ஜீவாவின் சிலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் உள்ளிட்ட ஏராளமான திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் முத்தரசன் கூறியதாவது: ஜீவாவுக்கு நெருக்கமான மூத்ததலைவரான நல்லகண்ணு இப்பூங்காவைத் திறந்து வைத்தது மிகச் சரியானதாகும். கடந்த ஆட்சியில் காசிமேட்டில் உள்ள ஜீவா நினைவிடம் பராமரிக்கப் படாமல் மோசமான நிலையில் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நினைவிடத்தை புதுப்பித்திருப்பது பாராட்டுக்குரியது என்றார் அவர்.