சென்னை, ஜூலை 24– நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரியும் டில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் ஏராளமான இளைஞர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் டில்லியில் பொதுப்போக்குவரத்து முடங்கியுள்ளது.
டில்லியின் பல மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. போராடும் இளைஞர்களை அப்புறப்படுத்த டில்லி காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் வருகின்றனர். இதனால் டில்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. டில்லியை தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் இளைஞர்கள், மாணவ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை அனைத்து நுழைவுகளையும் மூடி, காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இளைஞர்கள் மெரினா கடற்கரையில் கூடி போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
