அமெரிக்காவில் பெரியார் பன்னாட்டமைப்பு சார்பில்
புத்தம் புதுமையான வகையில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!
உலகின் பல நாடுகளிலும் அரங்கேறுகின்றன!
புத்தம் புதுமையான வகையில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!
உலகின் பல நாடுகளிலும் அரங்கேறுகின்றன!
சிகாகோ, ஜூலை 18 அமெரிக்காவில் பெரியார் பன்னாட்டமைப்பு – தந்தை பெரியார் பிறந்த நாளை, புத்தம் புதிய அம்சங்களுடன் உலகின் பல நாடுகளிலும் நடத்துகிறது.
இதுகுறித்து பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தந்தை பெரியார் பிறந்த நாள் –
நமக்கெல்லாம் பெரு விழா!
நமக்கெல்லாம் பெரு விழா!
பொங்கலுக்கு அடுத்து நாம் கொண்டாடும் சிறப்பான விழா தந்தை பெரியார் பிறந்த நாள விழா. நமக்கு அறிவுத் திருவிழா!
மூட நம்பிக்கையில் இன்றும் மூழ்கியும், கையில் கயிறுகளைக் கட்டிக் கொண்டு அலையும் , ஏன் படித்துப் பட்டங்கள் வாங்கியும் பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் மூளையில் விலங்கை மாட்டிக் கொண்டோரை விடுதலை அடையச் செய்யும் விழா!
இன்றைய கால கட்டத்திற்கு ஏற்ப, அனைவரும் பங்கேற்கும் குடும்ப விழாக்களாக நடத்துவோம்!
அமெரிக்காவிலே பெரியார் பன்னாட்டமைப்பு பல ஆண்டுகளாக இளைய தலைமுறையினரை இணைத்து விழா எடுத்து வருகின்றோம். அவர்களுக்கு வயதிற்கேற்பப் பேச்சுப்போட்டி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாட்டுப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி என்று நடத்திப் பரிசுகள் கொடுப்போம். இணைய வழியிலேயே நடத்தி வருகின்றோம்.
“கேள்வி எழுப்புங்கள்” போட்டி!
இப்போது புதிதாக “கேள்வி எழுப்புங்கள்” என்ற போட்டி வைக்க உள்ளோம். யார் சிறந்த கேள்விகள் கேட்கின்றார்களோ அவர்களுக்குப் பரிசு. பதில்களை, வல்லவர் ஒருவர் அளிப்பார்.
ககூட் என்ற இணைய விளையாட்டில் கேள்விகளுக்கு உடனுக்குடன் விரைவாகப் பதில் சொல்லும் போட்டி நடத்தவிருக்கிறோம். யார் நன்கு பதிலளிக்கின்றார்கள் என்பது உடனுக்குடன் தெரியும். போட்டி கடுமையாக இருக்கும்.
“பெரியார் ஓட்டம்- நடை”
“பெரியார் ஓட்டம்- நடை” மிகவும் வரவேற்பு பெற்று வருகின்றது. உலகெங்கும் இந்த ஆண்டு சிறப்பாக நடை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆங்காங்கே குடும்பங்களாகப் பங்கேற்று மகிழ்கின்றனர். பெரியார் சட்டை மாட்டிக் கொண்டு தமிழரல்லாத அமெரிக்கர்களும் ஓடுவது கண் கொள்ளாக் காட்சி! சிகாகோ, டல்லசு, ரேலி, நியூசெர்சி, கனடா போன்ற இடங்களில் ஓட்டங்கள் சிறப்பாக நடைபெற உள்ளன. பங்கேற்பாளர்கட்குப் பதக்கங்கள், பட்டயங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு திராவிடத் தலைவர்கள் பற்றி இளையோர் பேச உள்ளனர்.
ஆங்காங்கே நேரிலும், இணைய வழியிலும் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம்.
உலகெங்குமுள்ள பெரியார் தொண்டர்களும், மற்றவர்களும் குடும்பங்களாகப் பங்கேற்று விழாக்களை நடத்த வேண்டுகின்றோம்.
– இவ்வாறு பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
