அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது கடுமையான ஆயுதத் தாக்குதலை நடத்தின (28.2.2026). இதில் ஈரானின் இஸ்லாமியக் குடியரசின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.
அது மட்டுமா? அவரது மகன், மருமகன், மருமகள், பேரன் ஆகியோரும் கொல்லப் பட்டனர். பள்ளிக் கூடம் ஒன்றின் மீதும் இத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 165 குழந்தைகள் கொல்லப்பட்டு உலக அளவில் பெரும் கண்டனம் எழுந்தது.
ஈரானின் முதன்மை அதிபராக…
காமேனி இஸ்லாமிய அறிஞரின் மகனாக ஈரானின் மஷ்ஹதில் நகரில் பிறந்தார். தாயார் கதீஜா மீர்தா மதி தனது மகனையும் இசுலாமிய மார்க்கப் பற்றுக் கொண்டவராகவும், இலக்கிய ஆர்வம் மிக்கவராகவும் வளர்த்தார். இதன் அடிப்படையில் காமேனி எதேச்சதிகாரத்திற்கு எதிரான அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டு, 1981ஆம் ஆண்டு ஈரானின் முதன்மை அதிபர் ஆனார்.
அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கு எதிராக அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் அஞ்சாது போரிட்டார். பிற இசுலாமிய நாடுகளின் ஆதரவுகூட இதற்குக் கிட்டவில்லை. இறுதியாக அவரது உயிர் பறிக்கப்பட்டது.
மக்கள் திரண்டனர்
அயதுல்லா அலி காமேனியின் உடல் ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து பல முக்கிய நகரங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. அவரை மிகவும் நேசித்த அந்நாட்டு மக்கள் திரண்டு வந்து இறுதி மரியாதை செலுத்தினர். ஒரு தலைவனின் இறுதி நிகழ்வில் இவ்வளவு மக்கள் கலந்துகொண்டது இந்த நூற்றாண்டில் இதுவாகத்தான் இருக்கும் என்று பன்னாட்டு ஊடகங்கள் கூறின. ஆவேசத்தோடு திரண்டு வந்தப் பெண்கள் கண்ணீர் மல்க அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், “அமெரிக்கா ஒழிக!”, “இஸ்ரேல் ஒழிக!” என்று அம் மக்கள் ஒருசேர முழக்க மிட்டவாறு இருந்தனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் குழப்பமான அறிவிப்புகள், நான்கு மாதம் கழித்து இந்த இறுதி நிகழ்வு நடைபெற்றதற்குரிய காரணங்களுள் ஒன்றாகும். வெளிநாட்டுத் தலைவர்கள் பலரும் இறதி மரியாதை செலுத்தினர். இந்திய ஒன்றிய இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா தலைமையில் சென்ற குழுவினர் இந்திய நாட்டின் சார்பாக இறுதி மரியாதை செலுத்தினர்.
பிறந்த ஊரில் அடக்கம்
அயதுல்லா அலி காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி பாதுகாப்புக் காரணங்களால் இதில் பங்கேற்க வில்லை என்றும், அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தால் இறுதி மரியாதை செலுத்துகின்ற அரசு பூர்வமான பங்கேற்பைப் பல நாடுகள் தவிர்த்ததாகவும் ஈரானின் ‘தஸ்னிம்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் நாட்டின் கொடிகளையும், பதாகைகளையும் ஏந்திய மக்கள் சங்கமத்தில் காமேனியின் உடல் அவரது சொந்த ஊரான மஷ்ஹதில் அடக்கம் செய்யப்பட்டது (9.7.2026). ஈரான் நாட்டின் மீதான தாக்குதலுக்கு இடையே இறுதி நிகழ்வு நடந்து முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.
