ஆஸ்திரியாவின் ‘சால்ஸ்பர்க்’ (Salzburg) நகரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய பனிக் குகையான ‘ஈஸ்ரைசென்வெல்ட்’ (Eisriesenwelt) பனிக்குகையின் உலகப் புகழ்பெற்ற காட்சிதான் இது.
ஆஸ்திரியாவின் ‘சால்ஸ்பர்க்’ என்ற இடத்தில் நிலவும் கடுமையான குளிர் காரணமாக இயற்கையாகவே உருவாகும் ஒரு மாபெரும் உருளை வடிவம் பனிக்கட்டியாலானது (பனிப்பாறை) ஆகும். மக்கள் இங்கு சுற்றுலா (Picnic) வருகிறார்கள், மேலும் உள்ளூர் மக்கள் இதன் உருவாக்கத்திற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்களைத் தங்களின் குழந்தைகளுக்கு விளக்குகிறார்கள்.
ஆஸ்திரிய மக்களின் அணுகுமுறையை, இந்தியாவின் அமர்நாத் பனி லிங்க நிகழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பக்தி என்ற பெயரில் மனிதர்களின் பகுத்தறிவு எவ்வாறு மழுங்கடிக்கப்படுகிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
ஆஸ்திரியாவில் உள்ள இந்த மாபெரும் பனி அமைப்பை அங்கிருப்பவர்கள் பார்க்கும் பார்வை என்ன? அந்தப் பனிக்கட்டி இருக்கும் ‘சார்லஸ்பர்க்’ நகரை ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகவும், பனிக்கட்டி அமைப்பை இயற்கையின் விசித்திரமான அறிவியல் நிகழ்வாகவும் மட்டுமே பார்க்கிறார்கள். அங்குள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு, “குளிர்காலத்தில் குகைக்குள் நுழையும் குளிர்ந்த காற்று, வசந்த காலத்தில் உருகி வரும் நீரை எப்படிக் கடுமையான பனிக்கட்டியாக மாற்றுகிறது” என்ற இயற்பியல் அறிவியலைக் கற்றுக் கொடுக்கிறார்கள்.
ஆனால், இதே போன்ற ஒரு பனி உருவாக்கம் இந்தியாவின் அமர்நாத் குகையில் நிகழும்போது, அதனை அறிவியலாகப் பார்க்கத் தவறிவிடுகிறோம். அது வெறும் நீரின் இயற்பியல் மாற்றம் என்ற உண்மையை மறைத்து, அதற்கு ஆன்மீக முலாம் பூசி, ‘சுயம்பு லிங்கம்’ என்று கொண்டாடத் தொடங்கிவிடுகிறோம்.
மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகப் பழி!
இன்றைய சமூகத்தில் விசித்திரமான வடிவங்களைக் கண்டு பரவசப்படும் போலி பக்தியைக் கேள்வி கேட்டாலோ, அல்லது அதன் பின்னால் இருக்கும் அறிவியல் உண்மைகளை உரக்கச் சொன்னாலோ, மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி, பகுத்தறிவாளர்கள் கடுமையாகக் கேலி செய்யப் படுகிறார்கள். வட இந்தியாவில் இராமன் கோயில் உண்டியல் திருட்டு தொடர்பாக பேசியவர்களையே ராமனுக்காக உழைத்தவர்கள் எதிர்க்கிறார்கள். இதில் கருத்துச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று பேசித் திருட்டு தொடர்பாகப் பேசுபவர்களை ராமன் விரோதி என்று கூறும் நிலை வந்துவிட்டது.
இந்தியாவில் அமர்நாத் பனி லிங்கம் முழுமையாக உருவாகாமல் உருகி மறைவதற்குக் காரணமான புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை.
பனிக்கட்டியைத் தெய்மென்று கும்பிடுவதா?
ஆஸ்திரியா குகைப் பனியாக இருந்தாலும், அமர்நாத் பனி லிங்கமாக இருந்தாலும் இரண்டுமே இயற்கையின் உறைநிலை காரணமாக உருவாகும் பனிப்பாறைகள் தான். குகைக்குள் இருக்கும் பனிக்கட்டியைத் தெய்வமாகக் கும்பிட்டுக் கொண்டு, அறிவியலை அறிவியலாகப் பார்க்கப் பழகாதவரை, மனித இனம் இதுபோன்ற அறியாமை இருளில்தான் உழல வேண்டியிருக்கும்!
