ஈரான் – அமெரிக்கா மோதல்
அய்.நா. அறிவுரை
ஈரான் – அமெரிக்கா இடையிலான ராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ளதால், போரை கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க அய்.நா. வலியுறுத்தியுள்ளது. இரு நாடுகளின் மோதல் உலகப் பொருளாதாரம் மற்றும் பிராந்திய அமைதிக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் அய்.நா. கவலை.
ஆல்கஹால் கலந்த
மருந்துகளுக்குக் கட்டுப்பாடு
அதிக ஆல்கஹால் கொண்ட மருந்துகள் விற்பனைக்கு ஒன்றிய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இருமல், சளி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு, அதிக ‘எத்தில் ஆல்கஹால்’ கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகள் போதைக்காக பயன்படுத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து 12 சதவீத ஆல்கஹால் கலந்த மருந்துகளை, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் வாங்க முடியாது என்று தெரிவித்துள்ளது. இது 2027 ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது.
மேம்படுத்தப்பட்ட
அய்.ஆர்.சி.டி.சி. இணையதளம்
விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
பயணிகள் சிரமம் இல்லாமல் எளிதில் முன் பதிவு செய்யும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங் களுடன் மேம்படுத்தப்பட்டுள்ள அய்.ஆர்.சி.டி.சி., இணையதளம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அய்.ஆர்.சி.டி.சி. இணைதளம் மேம்படுத்தப்பட்டு தற்போது தயாராக உள்ளன. இதற்கான, முன்னோட்டப் பணிகளும் நடந்து வருகின்றன. பயணச்சீட்டு முன்பதிவை எளிமையாகவும், தடையின்றியும் செய்வதை நோக்கமாகக் கொண்டு 4 முக்கிய மேம்பாட்டு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன.
முன்பதிவு செய்யும்போது தேவையற்ற கேப்ட்சாக்களை நீக்குதல், தேவையற்ற பாப்-அப்களை அகற்றுதல், ஒளிரும் கிராபிக்ஸ், கவனச்சிதறல்களை ஏற்படுத்தும் அம்சங்கள் நீக்கப்படும். அனைத்து வகுப்புகளிலும் இருக்கை கிடைப்பது ஒரே பார்வையில் பார்க்கலாம். இவ்வாறாக பயணச்சீட்டு பதிவு செய்யும் முறைகள் எளிமைப்படுத்தி இருப்பது பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
