கோபன்ஹேகன், ஜூலை 9- உலகின் மிக சிறந்த மற்றும் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நகரங்களின் பட்டியலில், டென்மார்க் நாட்டின் தலைநகரம் முதலிடம் பிடித்துள்ளது. 2026இல் பன்னாட்டு அளவில் மிகச் சிறந்த மற்றும் மக்கள் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களில், டென்மார்க் தலைநகரமான கோபன்ஹேகன் (Copenhagen) பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில், இரண்டாவது ஆண்டாக டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் முதலிடம் பிடித்து உள்ளது. 2025-ஆம் ஆண்டில் வியன்னாவை (Vienna) பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்த இந்நகரம், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் அந்த இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
தற்போதைய பட்டியலில் ஆஸ்திரியா நாட்டின் வியன்னா 2-ஆம் இடமும், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் 3-ஆம் இடமும் பிடித்து உள்ளது.
இந்தியாவின் தலைநகரான டில்லி நகரம் இந்த பட்டியலில் 120-ஆவது இடத்தையும், மும்பை 121-ஆவது இடத்தையும், சென்னை 123-ஆவது இடத்தையும், பெங்களூரு 127-ஆவது இடத்தையும் பிடித்து உள்ளன.
இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள கோபன்ஹேகன் நகரம் மொத்தம் 100-க்கு 98 புள்ளிகளைப் பெற்றது. குறிப்பாக மதிப்பீட்டுப் பட்டியலின் அய்ந்து பிரிவுகளில் மூன்றில் அதாவது உறுதித்தன்மை, கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இந்த நகரம் முழு மதிப்பெண்களைப் பெற்றது. அத்துடன், சுகாதாரம் மற்றும் கலாச்சாரம்-சுற்றுச்சூழல் ஆகிய பிரிவுகளிலும் முறையே 96 மற்றும் 95 எனச் சிறப்பான புள்ளிகளைப் பெற்றது. அதே போல தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வேலைக்கும் இடையே மிகச்சிறந்த சமநிலையை (Work-life balance) வழங்கும் நகரங்களில் டென்மார்க் தலைநகரம் முதன்மையானது.
