சென்னை, ஜூலை 4- தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் அவர்கள் கடந்த மே 10ஆம் தேதி பொறுப்பேற்றார். அவர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், 500 யூனிட்டுகளுக்குக் கீழ் மின்சாரம் பயன்படுத்தும் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பு நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களிடையே பெரும் வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
இலவச மின்சாரச் சலுகை
இந்தச் சூழ்நிலையில், தங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரச் சலுகை வழங்கப்படவில்லை எனப் பல மின் நுகர்வோர்கள் தற்போது குற்றச்சாட்டை எழுப்பி வருகின்றனர்.
புதிய அறிவிப்புக்கு முன்னதாக, முதல் 100 யூனிட்டுகள் இலவசமாகவும், 101 முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.2.35 ஆகவும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. மேலும், 201 முதல் 400 யூனிட் வரை ரூ.4.70 ஆகவும், 401 முதல் 500 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.6.30 ஆகவும் கணக்கிடப்பட்டு வந்தது.
புதிய அறிவிப்பின்படி, முதல் 200 யூனிட்டுகள் முற்றிலும் இலவசமாக்கப்படும். அதற்கு மேல் பயன்படுத்தப்படும் 201 முதல் 400 வரை மற்றும் 401 முதல் 500 வரையிலான யூனிட்டுகளுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டண முறையிலேயே கணக்கீடு செய்யப்படும்.200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழும் நிலையில், அதற்கு மின் வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
புதிய முதலமைச்சர் பொறுப்பேற்ற மே 10ஆம் தேதிக்குத் தங்களுக்குப் பின் நுகர்வோரால் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மட்டுமே இந்த 200 யூனிட் இலவச மின்சாரச் சலுகை பொருந்தும் என அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
