சென்னை, மே 27 “மின் சாரத்துறை பற்றிய போதுமான புரிதல் இல்லாத அமைச்சரின் கீழ் இயங்கும் மின்வாரியம் இவ்வளவு மோசமாக முன்னெப்போதும் இருந்ததில்லை” என மின் துறை அமைச்சர் நிர்மல் குமாரின் குற்றச்சாட்டிற்கு தமிழ்நாடு மின்கழக தொ.மு.ச. பொதுச் செயலாளர் மணிமாறன் கடும் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தடையில்லா மின்சாரம்
கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் தேவைக்கேற்ப துணை மின்நிலையங்கள் அதிகப் படுத்தப்பட்டன. மின்விநியோக கட்டமைப்பு கூடுதலாக நிறுவப்பட்டு, பலப்படுத்தப்பட்டது. ஆங்காங்கே புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டதோடு, மின்சா ரத்தைக் கொண்டு செல்வதற்கு ஏதுவாக பிஜி மற்றும் லிஜி லைன்கள் புதிதாக நிறுவப்பட்டன. மின்நுகர்வோருக்கு எவ்வித இடர்பாடுகளும் ஏற்படாதவாறு மிகச்சிறந்த நிர்வாகத் திறமையுடன் கையாளப்பட்டதே, கடந்த திமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கிட முக்கிய காரணமாகும்.
பொதுமக்களின் புகார்களைத் தீர்க்க 2021-இல் ‘மின்னகம்’ என்ற பிரிவு ஏற்படுத்தப்பட்டது. அதன் மூலம் பெறப்படும் புகார்கள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டன. எவ்வித காலதாமதமும் இன்றி புதிய மின்இணைப்பு, பெயர்மாற்றம் உள்ளிட்ட சேவைகளும் சிறப்பாக வழங்கப்பட்டன. இதை ஏதோ இந்த அரசு வந்த பிறகுதான் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டது போல அமைச்சர் பேசுவது வடிகட்டிய பொய்யாகும்.
தமிழ்நாட்டின் உச்சபட்ச மின்தேவை கடந்த 29.4.2026 அன்று 21,307 மெகாவாட் ஆகவும், அன்றைய தினத்தின் உச்சபட்ச மின்நுகர்வு 471.456 மில்லியன் யூனிட் ஆகவும் இருந்தது.
கடந்த 4 நாட்களாக தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் 108 டிகிரி வரை இருந்ததால், மின்சார நுகர்வு பெருமளவு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மின்விநியோகத்தில் கடும் இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக மின் நுகர்வோரின் தேவையை சமாளிக்க முடியாமல் கடும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு, வீதிக்கு வந்து இந்த அரசுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
அமைச்சருக்குத் தகுதியில்லை
கோடையில் தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தை எங்கிருந்து, எப்படி பெறப்போகிறோம் என முன்கூட்டியே மின்வாரிய அதிகாரிகளுடனும், தொழிற் சங்கங்களுடனும் விவாதித்து முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை எடுக்க வேண்டிய மின்சாரத்துறை அமைச்சர், கடந்த கால தி.மு.க ஆட்சியின் மீது பழிபோட்டு தப்பிக்க முயற்சிக்கிறார்.
கூடுதல் மின்தேவைக்காக எவ்வித முன்நடவடிக்கையும் எடுக்காமல், மின்சாரத் துறை பற்றிய போதுமான புரிதல் பெறாத அமைச்சரின் கீழ் இயங்கும் மின்வாரியம் இவ்வளவு மோசமாக முன்னெப்போதும் இருந்ததில்லை. ‘வரும் பொருள் உரைத்தல் அமைச்சருக்கு அழகு’ என்பது தமிழ் பழமொழி! ஆனால், வந்த பின்பும் பொருள் உரைக்க முடியாமல் திணறுவது இவர் அமைச்சராய் இருக்கவே தகுதியில்லை என்பதை இந்த மின்வெட்டு காட்டுகிறது.
எனவே, தி.மு.க ஆட்சியின் மீது பழிபோடுவதை நிறுத்திவிட்டு, இனிமேலாவது துறைரீதியாக அதிகாரிகளுடனும், தொழிற்சங்கங்களுடனும் ஆய்வுக் கூட்டம் நடத்தி, விவாதித்து மின் தட்டுப்பாட்டை நீக்கி மக்களைக் காப்பாற்ற இந்த அரசு முன்வரவேண்டும் என அந்த அறிக்கையில் மணிமாறன் கேட்டுக்கொண்டுள்ளார்.
