சென்னை, மே 22 தற்போது சென்னை மாநகர காவல்துறை ஆணையராகப் பணியாற்றும் அபின் தினேஷ் மோடக் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் சி.பி.சி.அய்.டி. கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக, கூடுதல் டி.ஜி.பி. ஆக இருந்த அமல்ராஜ் நியமிக்கப்பட்டார். அவர் இன்று (22.5.2026) காலை சென்னை காவல்துறை ஆணையராக பதவி ஏற்றார்.
புதிய காவல்துறை ஆணையராக அமல்ராஜ், தமிழ்நாடு காவல்துறையில் பல்வேறு முக்கிய பதவிகளில் இருந்துள்ளார். சிறந்த நேர்மையான அதிகாரி ஆவார். இவர் 1996-ஆம் ஆண்டு அய்.பி.எஸ். அதிகாரியாக இந்திய காவல் பணியில் சேர்ந்தார்.
தமிழ்நாட்டில் திருப்பூரில் உதவி காவல்துறை கண்காணிப்பாளராக தனது பணியை தொடங்கினார். அதன்பிறகு பதவி உயர்வு பெற்று மதுரையில் துணை ஆணையராக பணியாற்றினார். தருமபுரி, தேனி, காஞ்சீபுரம், விழுப்புரம் மாவட்டங்களிலும் காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்தார். ராமநாதபுரம், திருச்சி, சேலம் ஆகிய சரகங்களில் காவல்துறை துணைத்தலைவராகயாகவும் சிறப்பாக பணியாற்றினார். காவல் துறைத் தலைவராக பதவி உயர்வு பெற்று சேலம், கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் ஆணையர் பொறுப்பு வகித்துள்ளார். சென்னையிலும் கூடுதல் ஆணையராக பணிபுரிந்துள்ளார். காவல்துறை கூடுதல் இயக்குநராக யாக பதவி உயர்வு பெற்ற பிறகு தாம்பரம் காவல்துறை ஆணையராக 2 முறை பணியாற்றியுள்ளார்.
இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் இயற்பியல் பிரிவில் பி.எஸ்.சி. மற்றும் எம்.எஸ்.சி. பட்டபடிப்பு படித்துள்ளார். கல்லூரி மாணவராக இருந்தபோது இவர் ஹாக்கி விளையாட்டுப்போட்டியில் தலைசிறந்த வீரர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சிறப்பு டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். கோவை, சேலம் நகரங்களில் இவர் ஆணையராக பணியாற்றிபோது, அந்த நகரங்களில் கண்காணிப்பு கேமரா வசதியை உருவாக்கிக் கொடுத்தார்.
கோவை ஆணையராக இருந்தபோது, அங்கு காவல்துறைக்கான மியூசியமும் அமைத்தார். சென்னையில் கூடுதல் ஆணையராக பணியாற்றியபோது, சென்னை எழும்பூரில் போலீஸ் மியூசியம் அமைப்பதற்கும் இவர் உறுதுணையாக செயல்பட்டார். இவர் தலைசிறந்த பணிக்காக குடியரசுத் தலைவர் விருதுபெற்றுள்ளார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் பதக்கமும் சிறந்த பணிக்காக இவருக்கு கிடைத்துள்ளது.
இவருக்கு சலீமா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் டாக்டராக உள்ளார். ‘காவல்துறையினருக்கு வெற்றி தரும் மேலாண்மைப் பண்புகள், வெல்ல நினைத்தால் வெல்லலாம், சிறகுகள் விரித்திடு, போராட கற்றுக்கொள், வெற்றியாளர்களின் வெற்றிப்படிகள்’ என்ற தலைப்புகளில் 5 புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை தவிர மருத்துவமனைகளில் யாரும்
ஆய்வு நடத்தக்கூடாது
ஆய்வு நடத்தக்கூடாது
த.வெ.க. நிர்வாகிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தல்
சென்னை, மே 22 சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகக் கூட்டரங்கில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தலைமையில் மாவட்ட தலைமையகம் மற்றும் பிற மருத்துவமனைகளின் செயல்பாடுகள் தொடர்பாக அனைத்து மருத்துவப் பணிகள் இணை இயக்குநர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கிளினிக் தொடங்குவதற்கு கிட்டத்தட்ட 8000 விண்ணப்பங்கள் உள்ளன. இதை தற்போது எளிமைப்படுத்த இருக்கிறோம். ஒளிப்படம், காட்சிப்பதிவு எடுத்து இணையதளத்தில் விண்ணப்பம் செய்தால் 1 ஆண்டிற்கான தற்காலிக அனுமதி வழங்கப்படும். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் ஆய்வு மேற்கொண்டு 5 ஆண்டிற்கான சான்றிதழ் வழங்கப்படும்.
சிறுநீரக முறைகேடு தொடர்பாக மீண்டும் முழு மூச்சில் விசாரணை நடக்கும். இந்த விசாரணை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும், நியாயம் கிடைக்கும். யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனைகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை தவிர யாரும் ஆய்வு நடத்தக் கூடாது என தவெக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
