மேற்குவங்க தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் பந்தயத்தில் இருக்கும் சுவேந்து அதிகாரி தனது தொகுதியான பவானிப்பூரில் பொதுமக்களைச் சந்தித்தபோது அவர் பேசிய அடாவடிப் பேச்சுதான், “ஹிந்துவாக மாறு! வசதிகள் செய்து தருகிறேன்!” என்பதாகும். மக்களாட்சி தத்துவத்தில் ஒரு மக்கள் பிரதிநிதி என்பவர், தமக்கு வாக்களித்தவர் மற்றும் வாக்களிக்காதவர் என அனைவருக்குமான பொதுவானத் தலைவராவார். தேர்தல் வரை மட்டுமே அரசியல்; வெற்றிக்குப் பின் அவர் அந்தத் தொகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பொறுப்பானவர். ஆனால், அடிப்படைத் தேவைகளுக்காகக் கோரிக்கை வைக்கும் மக்களிடம் மதத்தை நிபந்தனையாக முன்னிறுத்துவது, ஆரோக்கியமான ஜனநாயகத்தின் வீழ்ச்சியையே காட்டுகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் மீறல்
இந்திய அரசியலமைப்புச் சட்டம், குடிமக்கள் அனைவருக்கும் ஜாதி, மத, இனம் மற்றும் பாலின வேறுபாடின்றி சமமான உரிமைகளை வழங்குகிறது.
சமத்துவ உரிமை: ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்திருந்தால் மட்டுமே அரசுப் பணிகள் அல்லது வளர்ச்சிப் பணிகள் நடைபெறும் எனக் கூறுவது சட்டப்பிரிவு 14 மற்றும் 15-க்கு எதிரானது.
பதவிப் பிரமாணம்: ஒரு மக்கள் பிரதிநிதி பதவி ஏற்கும் போது, “பயமோ, பாரபட்சமோ இன்றி” பணியாற்றுவேன் என உறுதிமொழி ஏற்கிறார். மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவது அவர் எடுத்த அந்த புனிதமான உறுதிமொழிக்குச் செய்யும் துரோகமாகும்.
அடிப்படைத் தேவைகளில் மத அரசியல்
சாலை, குடிநீர், கல்வி மற்றும் மருத்துவம் போன்றவை ஒரு மனிதனின் அடிப்படை வாழ்வாதார உரிமைகள். இந்தப் பொதுவான தேவைகளிலும் மதத்தைப் புகுத்துவது சமூகப் பிரிவினையைத் தூண்டும் செயலாகும். சிறுபான்மையினரைத் திட்டமிட்டுப் புறக்கணிப்பதும், அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துவதும் ஒரு ஒருமைப்பாடு மிக்க தேசத்திற்கு அழகல்ல. இத்தகைய “ஒதுக்கல் அரசியல்” ஒட்டுமொத்த சமூக வளர்ச்சியையும் பின்னோக்கித் தள்ளும்.
வாக்காளர் ஏமாற்றமும், அறவீழ்ச்சியும்!
தேர்தல் களத்தில் ‘வளர்ச்சி’ (Development) என்ற ஒற்றை வார்த்தையை முன்வைத்து வாக்குச் சேகரித்துவிட்டு, வெற்றிக்குப் பிறகு ‘மதம்’ என்ற துருப்புச் சீட்டைப் பயன்படுத்துவது வாக்காளர்களை ஏமாற்றும் செயலாகும். மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அரசுப் பணிகள், ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு மட்டுமே எனச் சுருங்குவது நிர்வாகச் சீர்கேட்டின் உச்சமாகும்.
அரசியல் என்பது அதிகாரத்தைக் கைப்பற்று வதற்கானக் கருவி மட்டுமல்ல; அது மக்களுக்கான சேவையாக இருக்க வேண்டும். அடிப்படைத் தேவைகளில் மதத்தைப் புகுத்துவது நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைப்பதோடு, மக்களிடையே கசப்புணர்வையும் வளர்க்கும்.
“மக்களாட்சி என்பது பெரும்பான்மையினரின் ஆட்சி மட்டுமல்ல; அது சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதும் கூட.” எனவே, இத்தகையப் பிரிவினைவாதப் போக்குகள் கண்டிக்கப்பட வேண்டியவை மட்டுமல்ல, சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மாற்றப்பட வேண்டியவையும் கூட. மக்கள் பிரதிநிதிகள் மதங்களைக் கடந்து மனிதநேயத்துடன் செயல்படுவதே தேசத்தின் வளர்ச்சிக்கு நலம் பயக்கும்.
