சென்னை, ஏப்.29 முக்கனிகளான மா, பலா, வாழை ஆகியவற்றில் மாம்பழத்தைச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. மாம்பழம் என்றாலே அனை வருக்கும் நினைவுக்கு வருவது சேலத்து மாம்பழம் தான். இருப்பினும் பல மாவட்டங்களில் மாம்பழ விளைச்சல் காணப்படும்.
கோடை காலம் தொடங்கியதையடுத்து மாம்பழங்கள் விற்பனைக்கு வரத் தொடங்கி விட்டன. கடைகளில் மாம்பழங்கள் விற்பனைக்கான வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அதிக லாபத்திற்காக ரசாயனத்தை பயன்படுத்தி மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து ரசாயனம் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

