சென்னை, ஏப். 25- 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குத் திரும்புவதற்காக இன்று (25.4.2026) முதல் இரண்டு நாட்களுக்கு 14,508 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார்.
தேர்தலில் வாக்களிப்பதற்காகப் பயணம் செய்த மக்கள், எவ்விதச் சிரமமுமின்றி மீண்டும் தங்களது இருப்பிடங்களுக்கு வந்து சேர ஏதுவாகப் போக்குவரத்துத் துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக ஏப்ரல் 25 மற்றும் ஏப்ரல் 26 ஆகிய தேதிகளில் பேருந்துகள் பிரிக்கப்பட்டு இயக்கப்பட உள்ளன.
25.4.2026 முதல் சென்னைக்கு: வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், கூடுதலாக 1,295 சிறப்புப் பேருந்துகள்.
பிற ஊர்களுக்கு: முக்கிய நகரங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 2,500 சிறப்புப் பேருந்துகள்.
26.4.2026 அன்று சென்னைக்கு: வழக்கமான 2,092 பேருந்துகளுடன், கூடுதலாக 3,184 சிறப்புப் பேருந்துகள்.
பிற ஊர்களுக்கு: பல்வேறு பகுதிகளுக்கு இடையே 3,345 சிறப்புப் பேருந்துகள்.
ஒட்டுமொத்தமாக இரண்டு நாட்களில் மட்டும் 14,508 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், தங்களது பயணத்தைத் திட்டமிடவும் இந்தச் சிறப்புப் பேருந்துகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முக்கிய பேருந்து நிலையங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பயணிகளுக்கு வழிகாட்டவும் போதிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஏப்.30 வரை மழை பெய்ய வாய்ப்பு!
சென்னை, ஏப்.25- தமிழ்நாட்டில் இன்று முதல் ஏப். 30ஆம் தேதிவரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கிழக்கு விதர்பா முதல் குமரிக்கடல் வரை தெலங்கானா, உள் கருநாடகா மற்றும் தமிழ்நாடு வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை சுமார் 900 மீட்டர் உயரத்தில், நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று (ஏப். 25) முதல் ஏப். 27-ம் தேதிவரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், 28ஆம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 29, 30 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
உள் தமிழ்நாடு மாவட்டங்களில் இன்று முதல் 27ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும்.
தமிழ்நாட்டில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் 2 செமீ, மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

