சிங்கப்பூரின் தமிழ் தொண்டறச் செம்மல், நமது பாசத்திற்கும், அகநக நட்புக்கும் உரியவரும் ஆன அருமை நண்பர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் (வயது 83) அவர்கள் இன்று (22.4.2026) விடியற்காலை காலமானார் என்ற வேதனைக்கும், துயரத்திற்கும் உரிய செய்தி கேட்டு மிகவும் கலங்கினோம்.
தமிழ்நாட்டில் வேதாரண்யம் பகுதியில் உதித்தப் பெரு வணிக சுயமரியாதைக் குடும்பத்தில் ஒருவராக இருந்து சிங்கப்பூர் குடிமகனாக ஆனவர்.
தமிழ் இலக்கியச் செம்மல் – சீரிய பகுத்தறிவாளர் – எங்களது கொள்கை மற்றும் குடும்ப நண்பர்.
சிங்கப்பூர் செல்லும்போது தவறாமல் நான் சந்தித்து உரையாடி மகிழ்ந்த கெழுதகை நண்பர்.
சிறிது காலம் முன்பு, உடல் நலக் குறைவினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று கேள்விப்பட்டவுடனேயே, தேர்தல் பரப்புரைப் பயணத்தில் இருந்த போதே நான் அவரது வாழ்விணையருக்கு அவர் நலமடைய விழைந்து செய்தி அனுப்பினேன். கவிமாமணி மா.அன்பழகன் அவர்கள் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு பேசினார்.
நலமுடன் இல்லத்திற்குத் திரும்பி தமது ஒப்பிலா தொண்டறப் பணியைத் தொடருவார் என்று நம்பினோம்.
என்ன செய்வது? நடக்கக் கூடாத ஒன்று நடந்து விட்டது! பலரைக் கவிஞர்களாகவும், தமிழ் ஆர்வலர்களாகவும், எழுத்தாளர்களாகவும் ஆக்கிய அவர் ஒரு ‘தங்க சாலை’.
மனிதநேய மாண்பாளராகச் சிறந்து வாழ்ந்தவர் என்பதற்கோர் எடுத்துக்காட்டாக, மற்றையோருக்கும் வழிகாட்டும் வகையில் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அவரது உடல் ‘உடற்கொடை’ வழங்கப்பட்டது.
அவரது மறைவால் கடும் துயரத்திற்கு ஆளாகி யிருக்கும் அவரது துணைவியார் திலகவதி அன்பழகன், மகன்கள் அ.செல்வம், அ.இராமையாத் தேவர் என்கிற இராமையா, மருமகள் வேதநாயகி விசயபாரதி, பேத்தி நித்திலா மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ஆழ்ந்த இரங்கல். அவருக்கு நமது வீரவணக்கம்!
(கி.வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம்
22.4.2026

