ராஜபாளையம், ஏப்.14- விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் விவேகானந்தர் தெருவில் அதிமுகவினர் 12.4.2026 அன்று பணம் பட்டுவாடா செய்வதாக தகவல் கிடைத்தது. அங்கு அதிமுக நிர்வாகிகள் சிதம்பரமூர்த்தி, முனியாண்டி, முத்துக்குமார் ஆகியோர், அப்பகுதியில் வசிப்பவர்களின் பெயர்கள் அடங்கிய பேப்பருடன் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, பரப்புரை செய்ய வர விருப்பம் உள்ளவர்களின் பெயரைக் கேட்டு எழுதிக் கொண்டிருந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கார்த்திகேயன், பறக்கும் படை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பறக்கும் படை பிரிவினர் மற்றும் விருதுநகர் தெற்கு காவல்நிலைய காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் அதிமுக பிரமுகர்களிடம் சோதனை செய்தபோது ரூ.27 ஆயிரத்து 100 ரொக்கம் மற்றும் 31 டோக்கன் இருந்தது. பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து பறக்கும் படை அலுவலர் சுரேஷ்பாபு, அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்ய முயற்சித்ததாக ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் உதவி ஆய்வாளர் செல்வம் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
த.வெ.க.வினரும் பணப்பட்டுவாடா
தவெக தலைவர் விஜய், தனது கட்சியினரிடம் யாரிடமும் பணம் பெற கூடாது, யாருக்கும் பணம் கொடுக்க கூடாது என உறுதிமொழி பெற்றார். சேலம் மேற்கு தொகுதியில் தவெக சார்பில் முன்னாள் காவல் அதிகாரி லட்சுமணன் போட்டியிடுகிறார். வேட்புமனுவை தாக்கல் செய்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், தண்ணியாக பணத்தை வாரி இறைத்து வருகிறார்.
குறிப்பாக, தன்னுடன் பிரசாரத்திற்கு வரும் தொண்டர்களுக்கும், ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கும் பணத்தை வாரி வழங்கி வருகிறார். பிரசாரத்திற்கு வந்த தொண்டர்களுக்கு, தவெக நிர்வாகி ஒருவர் கட்சியின் தேர்தல் பணிமனை அலுவலகத்தில் வைத்து பணம் விநியோகம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான ஒளிப்படம் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ்நாடு தேர்தல் களம்
ரூ.727 கோடி பணம், பொருட்கள் சிக்கியது
பறக்கும் படை அதிரடி நடவடிக்கை!
சென்னை, ஏப்.14- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் சிக்கியுள்ளன. தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை பிடிபட்ட பொருட்களின் பட்டியல் பின்வருமாறு:
ரொக்கப் பணம்: ரூ.126 கோடி தங்கம் மற்றும் வெள்ளி: ரூ.295 கோடி இலவசப் பரிசுப் பொருட்கள்: ரூ.226 கோடி போதைப் பொருட்கள்: ரூ.75.4 கோடி மதுபானங்கள்: ரூ.2.36 கோடி மொத்த மதிப்பு: இதுவரை மொத்தம் ரூ.727 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த உரிமையாளர் களிடம் ரூ.265 கோடி மதிப்பிலான பொருட்கள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1.40 லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

