காரைக்கால், ஏப். 13- தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தையொட்டி வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வர உள்ளது. இதன் காரணமாக, ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் அனைவரும் கரை திரும்பி வரும் நிலையில், கடலுக்குச் சென்ற காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:
காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு சுனாமி நகரைச் சேர்ந்த வீரவேல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், கடந்த 10ஆம் தேதி அதிகாலை 12 மீனவர்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்றனர். இதில் காரைக்கால், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இருந்தனர்.
துப்பாக்கி முனையில் கைது:
இவர்கள் கோடியக்கரைக்கு அருகே, காரைக்காலில் இருந்து சுமார் 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லையையொட்டி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர். பின்னர், மீனவர்களின் படகைச் சுற்றி வளைத்த கடற்படையினர், 12 மீனவர்களையும் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட படகு:
மீனவர்களுடன் சேர்த்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள விசைப்படகு மற்றும் அவர்கள் பிடித்து வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்களையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் விசாரணைக்காக இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மீன்பிடி தடைக்காலம் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில், வாழ்வாதாரத்திற்காக கடலுக்குச் சென்ற மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் காரைக்கால், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களில் மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய, மாநில அரசுகள் தலையிட்டு மீனவர்களையும், படகையும் மீட்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத் துள்ளனர்.

