சமூகநீதிக்கான சரித்திர மாநாடு

Viduthalai
4 Min Read

தி.மு.க.வின் சார்பில் அகில இந்திய அளவிலான சமூக நீதி மாநாடு 3.4.2023 மாலை காணொலி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

குமரி முதல் காஷ்மீர் வரை என்று சொல்லத்தக்க வண்ணம் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் பங்கேற்றது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

பல மாநிலங்களின் முதல் அமைச்சர்கள், மேனாள் முதல் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் தலைவர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்ட திராவிடர் கழகம் போன்ற அமைப்புகளின் தலைவர்கள் என்று பல துறைப் பெரு மக்களும் பங்கு கொண்டது- சமூக நீதி வரலாற்றில் என்றென்றும் பேசக் கூடிய ஒன்றாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டது சமூகநீதியாகும்.

இந்தியத் துணைக் கண்டத்தைப் பொருத்தவரை சமூக நீதிக்கு முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. திராவிட இயக்கக் கோட்பாட்டில்  அடி கோடிட்டுக் குறிப்பிடத்தக்கது சமூக நீதியின் முக்கிய அம்சமான இடஒதுக்கீடாகும்.

பிரிட்டிஷ் ஆட்சியில், சென்னை மாநிலத்தில், நீதிக்கட்சி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீடு – சுதந்திர இந்தியா குடியரசாகி வெளிவந்த அரசமைப்புச் சட்டத்தைக் காட்டி கழுத்து முறிக்கப்பட்டு கொல்லப்பட்டது.

சமூகநீதி மாநாட்டுக்குத் தலைமை வகித்த தமிழ்நாடு முதல் அமைச்சரும், தி.மு.க. தலைவருமான  சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள், அந்த நிலையைச் சுட்டிக் காட்டி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் கொண்டு வரப்படுவதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் என்று மிகச் சரியாக எடுத்துரைத்தார்.

இன்றைக்கு இந்திய அளவில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டம் 9ஆம் அட்டவணைப் பாதுகாப்புடன் வலுவாக உள்ளது. தமிழ்நாட்டில்தான் என்பதைத் திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பதிவு செய்தார்.

சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தள்ளப்பட்ட மக்களுக்கே இடஒதுக்கீடு (Socially and Educationally Backward Classes of the Citizens) என்றுதான் அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. இந்த நிலையில் பொருளாதார அளவுகோலையும் தற்போதுள்ள ஒன்றிய அரசு திணித்திருப்பது சட்ட விரோதமே! பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற ஒன்றிய பிஜேபி அரசின் சட்டம், சட்ட விரோதமானது என்று தமிழ்நாடு முதல் அமைச்சர் மிகத் தெளிவாக உறுதிப்படுத்தினார்.

இன்னொரு கேள்வியையும் எழுப்பத் தவறவில்லை முதல் அமைச்சர். ‘இடஒதுக்கீடு கொண்டு வந்தால் தகுதி, திறமை கெட்டுப் போய்விடும் என்று சொன்னவர்கள், இப்பொழுது பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற நிலை ஏற்பட்டுள்ளதே- இப்பொழுது மட்டும் தகுதி – திறமை கெட்டுப் போகாதா என்று நெற்றியில் அடித்ததுபோல வினாக்கணையை ஏவினார்.

இப்பொழுதுகூட தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கான இடஒதுக்கீடு விழுக்காடு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான விழுக்காடு நிறைவு பெற்று இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்பதுதான் கிடைக்கும் விடையாகும்.

அதிலும் 27 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒன்றிய அரசின் துறைகளில் இடஒதுக்கீடு என்று சொல்லிக் கொண்டாலும் 15 விழுக்காட்டைத் தாண்டவில்லை என்பது எத்தகைய பெரும் கொடுமையும், அநீதியும் ஆகும்.

இதுவும் போதாது என்று ‘நீட்’ என்ற நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்து முதல் தலைமுறையில் கல்விக் கூடங்களைக் கண்ட குடும்பத்தைச் சார்ந்தவர்களும், கிராமப்புறங்களைச் சார்ந்தவர்களும் மருத்துவம் போன்ற தொழிற் கல்லூரிகளில் காலடி எடுத்து வைக்க விடாமல் குதிகாலை வெட்டும் ஏற்பாடு தானே இந்த ‘நீட்’ என்னும் கொடுவாள்.

இந்தியா முழுவதும் பல்வேறு கல்வித் திட்டங்கள் நடைமுறையில் இருக்க சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தின் அடிப்படையில் ‘நீட்’ தேர்வு என்றால் எத்தகைய சூழ்ச்சி வலை!

எடுத்துக்காட்டாக 2016ஆம் ஆண்டை எடுத்துக் கொள்ளலாம். 2016ஆம் ஆண்டில் ‘நீட்’ தேர்வு இல்லாதபோது சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 62 என்றால், ‘நீட்’ வந்த பிறகு அவர்களுக்குக் கிடைக்கப் பெற்ற இடங்கள் 1220 – அதாவது 20 மடங்கு அதிகம்.

தமிழ் வழியில் படித்தவர்கள் ‘நீட்’டுக்கு முன் பெற்ற இடங்கள் 2015-2016இல் – 510. 2016-17இல் பெற்ற இடம் 537. நீட் வந்த பிறகு (2017-2018 பெற்ற இடங்கள் வெறும் 52.

சமூகநீதியில் அக்கறை உள்ளவர்கள் முன்னுரிமை கொடுத்துப் போராட வேண்டிய இடம் இதுவாகும்.

கருநாடக மாநிலத்தில் இருந்து  வந்த இஸ்லாமியர்களுக் கான இடஒதுக்கீடு பிஜேபி ஆட்சியில்  இப்பொழுது அறவே நீக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் இந்தியத் துணைக் கண்டத்தில் தாழ்த் தப்பட்ட பழங்குடியினத்தினர், பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மை மக்கள்தான் பெரும்பான்மையினர்.

ஆனால் நடப்பிலோ நூற்றுக்கு மூன்று விழுக்காடே உள்ளவர்களின் கைகளில் அதிகாரம் குவிந்துள்ளது. இந்த நிலையில் பெரும்பான்மை மக்கள் கை இணைத்து சமூகநீதியின் வெற்றிக் கொடியை ஏற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இந்த வகையில் கடந்த 3ஆம் தேதி மாலை காணொலி மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான சமூகநீதி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது – இது தொடக்கமே! முழு வெற்றி கிட்டும் வரை போராடுவது – வெற்றி பெறுவது அவசியமாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *