புதுடில்லி, ஏப்.9 மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அம்மாநில ஆளும் கட்சியான திரிணாமமூல் காங்கிரஸ் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் இடையே மோதல் வெடித்துள்ளது. தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதா கட்சியுடன் மறைமுக உடன்பாடு வைத்துள்ளதாக திரிணாமூல் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு நேற்று (8.4.2026) டில்லியில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது பலரது வாக்குரிமை பறிக்கப்பட்டதாகவும், பாஜகவுடன் தொடர்புடைய அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் புகார் அளிக்க திரிணாமூல் காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை சந்தித்தனர். இந்த குழுவில்: மாநிலங்க ளவை தலைவர் டெரெக் ஓ பிரையன் துணைத் தலைவர் சாகரிகா கோஸ்
நாடாளுமன்ற உறுப்பினர் சாகேத் கோகலே, மேனகா குருசாமி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். வெறும் 7 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டெரெக் ஓ பிரையன், தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
“பாஜகவுடன் தொடர்புள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டால் தேர்தல் எப்படி நியாயமாக நடக்கும் என்று நாங்கள் கேள்வி எழுப்பினோம். ஆனால், எங்கள் புகார்களைக் காதுகொடுத்துக் கேட்பதற்குப் பதிலாக, தலைமை தேர்தல் ஆணையர் எங்களை ‘வெளியே போங்கள்’ என்பது போல மிகவும் அலட்சியமாக நடத்தினார்,” என அவர் குற்றம்சாட்டினார்.
பிரதிநிதிகள் குழு மனு அளித்த பிறகு டெரெக் ஓ பிரையன் தொடர்ந்து சத்தமாகப் பேசியதால், பொறுமையிழந்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்களை அறையை விட்டு வெளியேறுமாறு கூறியதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

