புதுடில்லி, ஏப். 5- சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிப்பது மற்றும் பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிராக நிலவும் பாகுபாடுகள் குறித்த மிக முக்கியமான வழக்கை, உச்சநீதி மன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வரும் 7.4.2026 அன்று முதல் விசாரிக்க உள்ளது.
வழக்கின் பின்னணி
சபரிமலை அய்யப்பன் கோயி லில் மாதவிடாய் பருவத்திலுள்ள பெண்கள் (10 முதல் 50 வயது வரை) நுழையத் தடை விதிக்கப்பட்டிருந்த நடைமுறையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2018-ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு “அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம்” என 4:1 என்ற கணக்கில் தீர்ப்ப ளித்தது.
இருப்பினும், இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமை யிலான அமர்வு, இது வெறும் ஒரு கோயில் சார்ந்த விவகாரம் மட்டுமல்ல; மசூதிகள் மற்றும் பார்சி மத வழிபாட்டுத் தலங்களிலும் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் நிலவுவதைச் சுட்டிக்காட்டியது.
ஏன் 9 நீதிபதிகள்
அமர்வு?
அமர்வு?
மதச் சுதந்திரம் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றுக்கு இடையேயான சட்ட நுணுக்கங்களை ஒரே விவகாரத்தின் அடிப்படையில் தீர்மானிக்க முடியாது என்பதால், விரிவான விசாரணைக்காக இந்த வழக்கு 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையில், நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, எம்.எம்.சுந்தரேஷ், அசானுதீன் அமானுல்லா, அரவிந்த் குமார், அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ், பிரசன்னா பி.வராலே, ஆர்.மகாதேவன் மற்றும் ஜயமால்ய பாக்சி ஆகியோர் இந்த அமர்வில் இடம்பெற்றுள்ளனர்.
காலக்கெடு:
7.4.2026ஆம் தேதி தொடங்கும் இந்த இறுதி விசாரணை, 22.4.2026ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்றிய அரசின்
நிலைப்பாடு:
நிலைப்பாடு:
சபரிமலை தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்களை ஆதரிப்பதாக ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.
முக்கியக் கேள்விகள்:
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 மற்றும் 26 (மதச் சுதந்திரம்) தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே எழுப்பியுள்ள 7 முக்கியக் கேள்விகளின் அடிப்படையில் இந்த விசாரணை அமையவுள்ளது.
மத ஆசாரங்களுக்கும், தனிமனித அடிப்படை உரிமைகளுக்கும் இடையிலான சமநிலையை உறுதி செய்யும் வகையில் இந்த அமர்வின் தீர்ப்பு அமையும் என்பதால், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
