சண்டிகர், ஏப்.5 பஞ்சாப் மாநிலத்தில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலின் போது அளித்த முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. பெண்களின் நிதி சுதந்திரம் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் சிறப்பம்சங்கள் வருமாறு: நிதியுதவி விவரம்: பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1,500-ம், இதர பெண்களுக்கு மாதம் ரூ.1,000-ம் வழங்கப்படும்.
உச்சவரம்பு இல்லை: ஒரே குடும்பத்தில் எத்தனை பெண்கள் இருந்தாலும், தகுதியுள்ள அனைவருக்கும் இந்த நிதியுதவி கிடைக்கும். இதற்கென குடும்ப அடிப்படையில் எந்த உச்சவரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை.
நேரடி பணப்பரிமாற்றம்: பயனாளிகளின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கித் கணக்குகளில் நேரடியாகப் பணம் செலுத்தப்படும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். பஞ்சாப் மாநில வாக்காளராக இருப்பதோடு, முறையான வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். அரசுப் பொறுப்புகளில் இருப்பவர்கள் மற்றும் வசதி படைத்தவர்களைத் தவிர்க்க சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன: ஒன்றிய/மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள். பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள் மற்றும் தீர்ப்பாயங்களில் பணியாற்றுபவர்கள்.
வருமான வரி செலுத்துபவர்கள். முன்னாள்/தற்போதைய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற மற்றும்சட்டமன்ற உறுப்பினர்களின் மனைவிகள். ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகளுக்குப் பிறகு, அமைச்சரவையின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு பஞ்சாப் மாநிலப் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

