மும்பை, ஏப்.1- மும்பையில் தான் தத்தாத்திரேயா கடவுளின் அவதாரம் என்று கூறிவந்த பார்ப்பன அர்ச்சகர் இளம் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்டார்.
இவர் மகாராட்டிரா மாநில அரசு மற்றும் முதலமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் மிகவும் பிரபலமான சாமியார் ரிஷிகேஷ் வைத்யா, இவர் தத்தாத்திரேயா என்னும் கோவிலைக் கட்டி தான் தான் தத்தாத்திரேயாவின் அவதாரம் என்று கூறி வந்தார்.
இவர் இஸ்லாமியர்களுக்கு எதிரானக் கருத்துகளை தொடர்ந்து சத்சங்க் கூட்டத்தில் பேசி வருபவர் ஆவார். இவர் மகாராட்டிர அரசின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பூஜை யாகம் செய்ய அழைக்கப்படும் நபராவார். மேலும் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிசுக்கு மிகவும் நெருக்கமான நபரும் ஆவார்.
‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் இந்துப் பெண்கள் சுரண்டப்படுவதைத் தடுக்க என்று கூறி அரசுடன் இணைந்துப் பிரச்சாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் மும்பை புறநகரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் குடும்பப் பிரச்சினை காரணமாக இவரிடம் சென்ற போது, “நான் தத்தாத்திரேயாவின் அவதாராம், என்னால் எந்த சிக்கலையும் தீர்க்க முடியும் என்று கூறி தீர்த்தம் வழங்கினார். அதனைக் குடித்த பிறகு நான் மயங்கிவிட்டேன். இதனை அடுத்து அவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.
சிறிது நேரத்திலேயே எனது மயக்கம் தெளிந்தது. அப்போது பார்ப்பன அர்ச்சகர் என்னை பாலியல் வன்கொடுமை செய்துகொண்டு அதை படம் பிடித்துகொண்டு இருந்தார். நான் எதிர்ப்பு தெரிவித்த போது கடவுளின் அவதாரத்திற்கு அனைவருமே சொந்தம் என்று கூறி என்னை மிரட்டினார். அவரது படுக்கை அறையில் முதலமைச்சருடன் எடுத்துக்கொண்ட படங்கள் இருந்தன” என்று அந்தப் பெண் கூறியுள்ளார்.
அப்பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் சாமியாரைக் கைது செய்தனர். கடவுள் அவதாரம் என்று சொல்லிகொண்டு இத்தகையக் கொடூரச் செயலில் ஈடுபட்டது சமூக வலைதளங்களில் பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது.
