புதுடில்லி, மார்ச் 31 இந்தியாவின் 16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டமான ‘வீடுகள் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு’ பணிகள் நாளை (ஏப்ரல் 1) முதல் தொடங்குகின்றன. டில்லி, கருநாடகா, ஒடிசா உள்ளிட்ட குறிப்பிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த முதற்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது குறித்து இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் மிருத்யுஞ்சய் குமார் நாராயண் வெளியிட்டுள்ள முக்கியத் தகவல்கள் பின்வருமாறு:
முக்கிய அம்சங்கள் மற்றும் கால அட்டவணை: கணக்கெடுப்பு நடைபெறும் இடங்கள்: முதற்கட்டமாக டில்லி, கருநாடகா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், கோவா, சிக்கிம், ஒடிசா, லட்சத்தீவு மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் பணிகள் தொடங்குகின்றன.
நேரடிக் கணக்கெடுப்பு: வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி ஏப்ரல் 15 முதல் மே 15 வரை நடைபெறும்.
டிஜிட்டல் முறை: இம்முறை முதன்முதலாக ‘சுய கணக்கெடுப்பு’ (Self-Enumeration) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. கேள்விகள்: வீடுகள் மற்றும் வசதிகள் தொடர்பாக மொத்தம் 33 கேள்விகள் மக்களிடம் கேட்கப்படும்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் பொதுமக்களின் தனிநபர் தரவுகள் அனைத்தும் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தரவுகளைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெற முடியாது.நீதிமன்றத்திலோ அல்லது வேறு எந்த அரசு/தனியார் அமைப்புகளிடமோ சான்றாகப் பகிரப்பட மாட்டாது.முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் தரவுகள் சேகரிக்கப்படுவதால், முடிவுகள் விரைவாக (2027-க்குள்) வெளியிடப்படும்.
மக்கள்தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டத்தில் ஜாதி தொடர்பான தரவுகள் சேகரிக்கப்படும் என்றும், அது குறித்த கேள்விகள் பின்னர் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் எந்தவித ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை; மொபைல் செயலி மூலமே தகவல்கள் பதிவு செய்யப்படும்.
சுய கணக்கெடுப்பு செய்ய விரும்புபவர்கள், அரசு வெளியிட்டுள்ள இணையதளத்தில் உள்ள 33 கேள்விகள் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் சந்தேகங்களுக்கான (FAQ) விளக்கங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
