டிட்லாகர், மார்ச் 31- ஒடிசா மாநிலம், பலாங்கிர் மாவட்டம் டிட்லாகரில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தின் போது, பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியைப் பெற்று வானத்தை நோக்கி சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
துப்பாக்கியால் சுட்ட
பா.ஜ.க. எம்.எல்.ஏ.
கடந்த 27.3.2026 அன்று டிட்லாகரில் ராம நவமி ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் திரண்டிருந்தனர்.
இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற டிட்லாகர் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் நவீன் குமார் ஜெயின் (58), திடீரென தனது பாதுகாப்பு அதிகாரி பிரேமா சந்த் நாக்கிடமிருந்து கைத்துப்பாக்கியைப் பெற்று, சினிமா பாணியில் வானத்தை நோக்கி சுட்டார்.
பொதுமக்கள் நிறைந்த பொது இடத்தில் அவர் மேற்கொண்ட இந்த ஆபத்தான செயலின் காட்சிப் பதிவு காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி அதிர்ச்சியை ஏற் படுத்தியது.
இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் நவீன் குமார் ஜெயின் விளக்கம் அளிக்கையில், “ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்களை உற்சாகப்படுத்தவே அவ்வாறு செய்தேன். நான் பயன்படுத்தியது பொம்மை துப்பாக்கிதான். பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கம் எனக்கு துளியும் இல்லை” என்று தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினரின் இந்தச் செயலைக் கண்டு கொள்ளாமல் தடுத் திருக்கத் தவறியதற்காகவும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காகவும் பாதுகாப்பு அதிகாரி பிரேமா சந்த் நாக்-அய் காவல்துறையினர் அதிரடியாக தற்காலிக வேலை நீக்கம் செய்துள்ளனர்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர் நவீன் குமார் ஜெயின் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தை யடுத்து, ஆளும் பாஜக அரசு சட்ட ஒழுங்கை சீர்குலைப்பதாக எதிர்க்கட்சியான பிஜூ ஜனதா தளம் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. பொது இடத்தில் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்ட மக்கள் பிரதிநிதியின் செயல் அந்தப் பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
