புதுடில்லி, மார்ச் 29 2026-2027 நிதியாண்டின் முதல் அரையாண்டிலேயே (ஏப்ரல் – செப்டம்பர்) ரூ. 8.2 லட்சம் கோடி கடனைத் திரட்ட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு, தற்போது தமிழ்நாட்டின் அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அதிகார பூர்வ அறிவிப்பின்படி:
மொத்த இலக்கு: 2026-2027 நிதியாண்டிற்கான மொத்த சந்தைக் கடன் இலக்கு ரூ. 17.20 லட்சம் கோடி.
முதல் அரையாண்டுத் திட்டம்: இதில் 51 சதவீதத்தை, அதாவது ரூ. 8.20 லட்சம் கோடியை முதல் ஆறு மாதங்களிலேயே பத்திரங்கள் வாயிலாகத் திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது.
காரணம்: வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்டவும், வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதித் தேவையைப் பூர்த்தி செய்யவும் இந்தக் கடன் பெறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு எழும் கேள்விகள்
தமிழ்நாடு அரசு தனது வளர்ச்சித் திட்டங்களுக்காகக் கடன் வாங்கும் போதெல்லாம், “தமிழ்நாடு கடன் வலையில் சிக்கியுள்ளது” என்று மேடைக்கு மேடை முழங்கி வரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, சமூக வலைதளங்களில் திமுகவினர் மற்றும் நடுநிலையாளர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
“தமிழ்நாடு அரசு வாங்கும் கடனை மட்டும் விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய அரசு ஒரே ஆண்டில் 17 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குவது பற்றி ஏன் மவுனம் காக்கிறார்?” என்பதே அவர்களின் முதன்மையான கேள்வியாக உள்ளது. தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து எடப்பாடி பழனிசாமி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தச் செய்தி பார்க்கப்படுகிறது. “மாநிலங்களின் உரிமைகளைப் பறித்துவிட்டு, நிதிப் பங்கீட்டிலும் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசு, இவ்வளவு பெரிய தொகையைக் கடனாகப் பெறும்போது அது எடப்பாடி பழனிசாமியின் கண்ணுக்குத் தெரியவில்லையா?” என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
