சென்னை, மார்ச் 25- அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் பாஜகவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகள் பாஜகவுக்கு வழங்கப்படும் என்ற உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
மேற்கு மண்டலம், தென் தமிழ்நாட்டில் அதிக இடங்களை பாஜக பெற இருப்பதாகத் தெரிகிறது.
என்.டி.ஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகி யுள்ளது.
வேளச்சேரி, துறைமுகம், மயிலாப்பூர், விருகம்பாக்கம், வானூர், திருச்செங்கோடு, அந்தியூர், பழனி, திருப்பூர் தெற்கு, சூலூர், அரவக்குறிச்சி, ராசிபுரம், குன்னூர், தளி, மொடக்குறிச்சி, கோவை வடக்கு, மதுரை தெற்கு, சிங்காநல்லூர், பல்லடம், குளச்சல், பத்மநாபபுரம், நாகர்கோயில், விளவங்கோடு, மயிலாடுதுறை, சாத்தூர், திருச்செந்தூர், திருநெல்வேலி, திருத்தணி, கும்பகோணம் உள்ளிட்ட தொகுதிகளை விருப்பத் தொகுதிகளாக தேர்வு செய்துள்ளது பாஜக.
சாத்தூர், கோவை வடக்கு, சிங்காநல்லூர், விருகம்பாக்கம், மதுரை தெற்கு, விளவங்கோடு, நாகர்கோவில், ராதாபுரம், திருப்பூர் தெற்கு, பல்லடம், பண்ருட்டி, கே.வி.குப்பம், சிவகங்கை, தளி, திருச்செங்கோடு ஆகிய தொகுதிகள் பாஜகவுக்கு இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு சில தொகுதிகளை அதிமுக கூட்டணியில் உள்ள பாமக மற்றும் அமமுக கட்சிகள் அத்தொகுதிகளை கேட்டு வருவதால் அந்த தொகுதிகள் இறுதி செய்யப்படவில்லை. சென்னையில் உள்ள வேளச்சேரி, தியாகராயர் நகர் மற்றும் நாங்குநேரி தொகுதிகளை கூட்டணியில் உள்ள கட்சிகள் தொடர்ச்சியாக கேட்டு வருவதால் விரைவில் முடிவுகள் எட்டப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரங்கள் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். என்.டி.ஏ கூட்டணியில் உள்ள தமாகா, அய்ஜேகே உள்ளிட்ட கட்சிகளுடன் விரைவில் உடன்பாடு கையெழுத்து ஆகும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
