மும்பை, மார்ச் 24- தனியார் பயிற்சி வகுப்பு ஒன்றில் அதன் ஆசிரியரான ரிஷி ஜெயின் என்பவர் நான் திருடன் போன்றோ அருந்ததியர் போன்றோ (சோர், சமார்) இருந்தால் நான் இங்கு வந்திருக்க மாட்டேன் என்று கூறினார்.
இவரது இந்த ஜாதிய ரீதியான அவதூறு தொடர்பான சமூகவலைதளங்களில் கடுமையான கண்டனம் கிளம்பியது.
பிரபல அறிவியல் தொழில்நுட்ப ஆசிரியராகப் பணியாற்றும் ரிஷி ஜெயின் இணைய வழி வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது ஒரு மாணவர் அவர் பார்ப்பதற்கு நடிகர் ரவி கிஷன் போல இருப்பதாகக் கமெண்ட் செய்துள்ளார்.
அதற்குப் பதிலளித்த ரிஷி ஜெயின், “நான் ரவி கிஷன் போல இருப்பது பெருமையாக இருக்கிறது, அவர் ஒரு நட்சத்திரம். ஒருவேளை நான் திருடனைப் போலவோ அல்லது ‘சமார்’ (அருந்ததியரைக் குறிக்கும் வடமொழிச்சொல்) போலவோ இருந்திருந்தால் அது எனக்கு பெரும் அவமானமாக இருந்திருக்கும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இந்த காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் கண்டனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘பிசிக்ஸ் வாலா’ நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது: சம்பந்தப்பட்ட ஆசிரியர் ரிஷி ஜெயினை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்துள்ளது. எவ்வித பாகுபாடான அல்லது உணர்ச்சியற்ற பேச்சுகளையும் தங்கள் நிறுவனம் சகித்துக்கொள்ளாது என்று அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. சர்ச்சை வெடித்ததையடுத்து ஆசிரியர் ரிஷி ஜெயின் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
“தெரியாமல் பயன்படுத்திய அந்தச் சொல் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் புண்படுத்தி விட்டது. ஒரு ஆசிரியரின் கடமை சமூகத்தை ஒன்றிணைப்பதே தவிர, காயப்படுத்துவது அல்ல. நிபந்தனையற்ற முறையில் நான் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
