மும்பை, மார்ச் 23 பன்னாட்டு அரசியல் சூழல் மற்றும் உள்நாட்டுப் பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், சாமானிய மக்களின் குடும்ப பட்ஜெட்டில் மற்றுமொரு இடியாக வங்கிச் சேவைகளுக்கான கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஏடிஎம் மற்றும் யுபிஅய் பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டணக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, வங்கிகள் தங்களது இலவச ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பைத் தாண்டிய பிறகு வசூலிக்கும் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.
தற்போது நிலவும் ரூ. 21 என்ற கட்டணம், ஏப்ரல் 1 முதல் ரூ. 23 + ஜிஎஸ்டி ஆக அதிகரிக்கப்படுகிறது. மெட்ரோ நகரங்களில் (சென்னை, டில்லி, மும்பை உள்ளிட்டவை) சொந்த வங்கி ஏடிஎம்களில் 5 முறையும், இதர வங்கிகளில் 3 முறையும் மட்டுமே இலவசமாகப் பணம் எடுக்க முடியும்.
நிதியல்லாத பரிவர்த்தனைகளுக்கும் (மினி ஸ்டேட்மென்ட், பின் மாற்றம்) சில வங்கிகள் தனித்தனியே கட்டணம் நிர்ணயித்துள்ளன.
யுபிஅய் (UPI)
பரிவர்த்தனைகளுக்கும் சிக்கல்
இதுவரை கார்டு மூலம் பணம் எடுப்பதற்கு மட்டுமே கணக்கிடப்பட்ட இலவச வரம்பு, இனி யுபிஅய் மூலம் எடுக்கப்படும் ‘கார்டு இல்லாத’ (Cardless) பணப் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும் என எச்டிஎப்சி போன்ற முன்னணி வங்கிகள் அறிவித்துள்ளன. இதன் மூலம், கியூஆர் கோடு ஸ்கேன் செய்து ஏடிஎம்மில் பணம் எடுப்பதும் மாதந்திர இலவச வரம்பிற்குள்ளேயே வரும். வரம்பு மீறினால் ஒவ்வொரு முறைக்கும் ரூ. 23 கட்டணம் வசூலிக்கப்படும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட சில வங்கிகள், தங்களது குறிப்பிட்ட டெபிட் கார்டுகளுக்கான அன்றாடப் பணப் பரிவர்த்தனை வரம்பைக் குறைத்துள்ளன: ரூபே பிளாட்டினம்/விசா கோல்டு: ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 50,000 ஆக குறைப்பு. ரூபே செலக்ட்/விசா சிக்னேச்சர்: ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 75,000 ஆக குறைப்பு.
பாதிப்பு
இந்த மாற்றங்கள் சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடையே கவலையை ஏற்படுத்தி யுள்ளன: சிறு வியாபாரிகள் – – அன்றாடத் தேவைக்காக அடிக்கடி ஏடிஎம் செல்லும் தள்ளுவண்டி மற்றும் பெட்டிக்கடை வியாபாரிகளுக்கு இது பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தும்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளை விட ரொக்கத்தையே நம்பியிருக்கும் மூத்த குடிமக்கள், பாதுகாப்பு கருதி அவ்வப்போது சிறிய தொகையாக எடுப்பதால் அதிக கட்டணம் செலுத்த நேரிடும்.
