புதுடில்லி, மார்ச் 22 ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 1948-ஆம் ஆண்டின் பல் மருத்துவர்கள் சட்டம் ரத்து செய்யப்பட்டு, இந்திய பல் மருத்துவ கவுன்சிலுக்கு (DCI) மாற்றாக தேசிய பல் மருத்துவ ஆணையம் (National Dental Commission – NDC) அமைக்கப்பட்டுள்ளது. இது மார்ச் 19 முதல் அதிகாரப்பூர்வமாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
பல் மருத்துவக் கல்வியை உலகளாவிய தரத்திற்கு உயர்த்துதல். கல்வி நிறுவனங்களின் தரத்தை மதிப்பீடு செய்து அங்கீகாரம் அளித்தல். தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டண வழிகாட்டுதல்களை வகுத்தல். பல் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் தொழில் தர்மத்தை மேம்படுத்துதல்.
நிர்வாகக் குழு மற்றும் வாரியங்கள்
இந்த ஆணையத்தின் தலைவராக மருத்துவர் சஞ்சய் திவாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இளநிலை மற்றும் முதுநிலை பல் மருத்துவக் கல்வி வாரியம்:
கல்வியைக் மேற்பார்வையிட. பல் மருத்துவ மதிப்பீடு மற்றும் தரவரிசை வாரியம்:
கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த. நெறிமுறைகள் மற்றும் பல் மருத்துவப் பதிவு வாரியம்:
மருத்துவர்களின் தொழில்முறை நடத்தை மற்றும் பதிவுகளைப் பராமரிக்க. ஆணையத்தின் பணிகளைச் சீராக மேற்கொள்ள மூன்று தன்னாட்சி வாரியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன
மார்ச் 19 முதல் பழைய பல் மருத்துவர்கள் சட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய தேசிய பல் மருத்துவ ஆணை யச் சட்டம் அமலுக்கு வந்துள்ளதால் இனி இந்திய பல் மருத்துவத் துறை இந்த ஆணையத்தின் கிழ் இயங்கும்.
12 ஆண்டு கால போராட்டம்
விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.61 லட்சம் இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவு
புதுடில்லி, மார்ச் 22 உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் படுகாயமடைந்த சத்யா வீர் சிங் என்பவரது குடும்பத்திற்கு, 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.61 லட்சம் இழப்பீடு வழங்க டில்லி மோட்டார் விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி, காஜியாபாத்தின் ராஜ் நகர் விரிவாக்கச் சாலையில் சத்யா வீர் சிங் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த கார் அவர் மீது மோதியதில், அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டு 90 சதவீதம் மூளை செயலிழந்தது. அவர் முற்றிலும் இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதை 100 சதவீத உடல் ஊனமாக தீர்ப்பாயம் கருத்தில் கொண்டது.
இந்த விபத்து தொடர்பாக 2014-இல் தாக்கல் செய்யப்பட்ட இழப்பீடு மனு, இடையில் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் டில்லி உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கு நிலுவையில் இருந்தபோதே, கடந்த ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி சத்யா வீர் சிங் உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, வாரிசுகள் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தினர்.
கார் ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்குக் காரணம் என்பதை சாட்சிகளின் அடிப்படையில் உறுதி செய்த தீர்ப்பாய அதிகாரி விஜய் குமார் ஜா, பின்வரும் இழப்பீட்டுத் தொகையை அறிவித்தார்:
மருத்துவச் செலவுகள்: ரூ.9.38 லட்சம்
எதிர்கால வருமான இழப்பு: ரூ.21.93 லட்சம்
உதவியாளர் கட்டணம்: ரூ.16.62 லட்சம்
இதர செலவுகளையும் சேர்த்து மொத்தம் ரூ.61 லட்சத்தை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் வங்கி கணக்கில் 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனத்திற்கு தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வேட்பாளர்கள் தங்கள் மீதான வழக்கு விவரங்களை ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும்
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு
சென்னை, மார்ச்.22 தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் மற்றும் தண்டனை விவரங்களை ஊடகங்களில் கட்டாயம் விளம்பரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
விளம்பரம் செய்தல்: வேட்பாளர்கள் தங்கள் மீதான வழக்கு விவரங்களை உரிய படிவங்களில் செய்தித் தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பொது மக்களுக்குத் தெரியும் வகையில் வெளியிட வேண்டும்.
அரசியல் கட்சிகளின் பொறுப்பு: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகள், அதுகுறித்த விவரங்களை ஊடகங்கள் மற்றும் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பதிவேற்ற வேண்டும்.
காலக்கெடு: வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளுக்கு அடுத்த நாள் முதல், வாக்குப்பதிவு முடிவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை 3 முறை வெவ்வேறு நாட்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அல்லது வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 2 வாரங்களுக்கு முன்பாகவே (எது முந்தையதோ) விவரங்களை வெளியிட வேண்டும்.
அறிக்கை சமர்ப்பித்தல்: விளம்பரம் செய்ததற்கான அறிக்கையை அடுத்த 72 மணி நேரத்திற்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான விரிவான அறிவுரைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களின் பட்டியலைத் தெரிந்துகொள்ள பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் www.elections.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
