புதுடில்லி, மார்ச் 22- இந்தியாவை அரிய வகை புவி காந்த உற்பத்தியின் உலகளாவிய மய்யமாக மாற்றும் நோக்கில், பெரும் நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய புதிய ஏல அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட ஆலைகளை அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பிரம்மாண்ட திட்டத்திற்காக மொத்தம் ரூ.7,280 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் நியோடைமியம்-இரும்பு-போரான் போன்ற அரிய வகை காந்தங்களின் தேவையைக் குறைத்து, உள்நாட்டிலேயே உற்பத்தியைப் பெருக்குவதே இதன் நோக்கம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை மின்னணு வாகனங்கள், காற்று விசையாழிகள், வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒன்றிய பொது கொள்முதல் வலைதளத்தின் வாயிலாக இணைய வழியில் நடைபெறும்.
நிபுணர்களின் கவலை:
பொதுத்துறைக்கு இழப்பா?
பொதுத்துறைக்கு இழப்பா?
வழக்கமாக, இத்தகைய அரிய வகை தனிமங்களை எடுக்கும் உரிமையை முதலில் பொதுத்துறை நிறுவனங்களே (PSUs) பெற்று, பின்னர் தேவைப்படின் ஒப்பந்த அடிப்படையில் பணிகளைப் பகிர்ந்தளிக்கும் முறை நடைமுறையில் இருந்தது. இதன் மூலம் அரசுக்கு நேரடி லாபமும், ஆயிரக்கணக்கானோருக்கு நிலையான வேலைவாய்ப்பும் கிடைத்து வந்தது.
ஆனால், தற்போதைய மோடி அரசு இந்த உரிமைகளை நேரடியாகத் தனியார் நிறுவனங்களுக்கு ஏலத்தின் மூலம் வழங்குவது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது:
பொருள் விரயம்
அரசுக்குச் சேர வேண்டிய பெரும் லாபம் தனியார் நிறுவனங்களுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
வேலைவாய்ப்பு இழப்பு
பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டிய நிரந்தர அரசு வேலைவாய்ப்புகள் இதனால் பறிபோகும் அபாயம் உள்ளது.
நிறுவன ஆதரவு
‘ஏலம்’ என்ற பெயரில் அரசுக்கு நெருக்கமான குறிப்பிட்ட சில பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாக இந்த நடைமுறை அமையலாம் என நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பரில் அமைச்சரவை ஒப்புதல் அளித்த இந்தத் திட்டம், தற்போது அதிகாரப்பூர்வ ஏல நிலையை எட்டியுள்ள நிலையில், நாட்டின் முக்கிய வளங்கள் தனியார் மயமாகி வருவது குறித்த விவாதங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன.
