புதுடில்லி, மார்ச் 20- தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (19.3.2026) டில்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமுகமாக இறுதி செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இன்னும் 10 நாட்களே அவகாசம் இருப்பதால் தொகுதிப் பங்கீட்டை விரைந்து முடிக்க பாஜக தலைமை வலியுறுத்தியது.
ஏற்கெனவே ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்த நிலையில் நேற்றிரவு இரவு அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி நடத்திய தீவிர ஆலோசனையில் என்ன நடந்தது என்று இரண்டு தரப்பும் கூறவில்லை
இதனைத் தொடர்ந்து, ஓரிரு நாட்களில் கூட்டணிக் கட்சிகளுடன் பேசி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட உள்ளது.
அதிமுக தரப்பில் தொகுதிப் பங்கீடு ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், மற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இன்று டில்லி செல்கின்றனர்:
டிடிவி தினகரன்: கூடுதல் தொகுதிகள் கோரி வரும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று அமித் ஷாவைச் சந்திக்கிறார்.
அன்புமணி ராமதாஸ்: பாமக தலைவர் அன்புமணியும் டில்லி சென்று ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிவை எட்டியுள்ள நிலையில், அதிமுக கூட்டணி இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் டில்லிக்கு தொடர்ச்சியாக காவடி தூக்குவது போல் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிதலைவர்கள் செல்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
