மனாமா, மார்ச் 20- இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, பஹ்ரைனில் 18 நாட்களுக்கும் மேலாக தாயகம் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்த 192 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஒரு சிறப்பு விமானம் மூலம் நேற்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றம் தொடங்கியதையடுத்து, பாதுகாப்பு கருதி வளைகுடா நாடுகளின் வான்வழிப் பகுதிகள் மூடப்பட்டன. இதனால் வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவுக்கான வழக்கமான விமான சேவைகள் முற்றிலும் முடங்கின. இதன் விளைவாக, பஹ்ரைனில் பணிபுரிந்து வந்த ஏராளமான தமிழர்கள் இந்தியா திரும்ப முடியாமல் அங்கேயே தவிக்கும் சூழல் உருவானது. பஹ்ரைனில் சிக்கித் தவித்தவர்களில் முதியோர், நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அவர்களைச் சென்னைக்கு அனுப்ப பஹ்ரைன் தமிழ்ச் சங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.
ஆரம்பத்தில், பஹ்ரைனிலிருந்து சென்னைக்கு விமானங்களை இயக்கும் ‘கல்ஃப் ஏர்வேஸ்’ நிறுவனம், தற்போதைய சூழலில் பஹ்ரைன் மண்ணிலிருந்து விமானங்களை இயக்க முடியாது எனத் தெரிவித்தது. எனினும், பஹ்ரைன் அருகே உள்ள சவுதி அரேபியாவின் தமாம் நகரிலிருந்து விமானத்தை இயக்க அந்நிறுவனம் சம்மதித்தது. இதனைத் தொடர்ந்து, பஹ்ரைன் தமிழ் சங்கத்தினர் 192 பேரையும் பேருந்துகள் மூலம் சாலை வழியாக சவுதி அரேபியாவின் தமாம் நகருக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து கல்ஃப் ஏர்வேஸ் சிறப்பு விமானம் மூலம் அவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னைக்குப் புறப்பட்டனர்.
விமான பயணச்சீட்டு எடுக்கப் பணம் இல்லாமல் தவித்த சிலருக்கு, பஹ்ரைன் தமிழ்ச் சங்கம் மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் நிதியுதவி அளித்து பயணச்சீட்டுகளை எடுத்துத் தந்துள்ளனர்.
சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்தடைந்த 192 பேருக்கும் குடியுரிமை மற்றும் சுங்கத்துறைச் சோதனைகள் விரைவாக முடித்து வைக்கப்பட்டன. விமான நிலையத்திற்கு வெளியே வந்த அவர்களைத் தமிழ்ச் சங்கத்தினர் மற்றும் உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பின்னர் அனைவரும் தத்தமது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் பஹ்ரைனில் 18 நாட்கள் தவித்த 192 தமிழர்கள் சென்னை திரும்பினர்
Leave a Comment
