கொல்கத்தா, மார்ச் 15 மேற்கு வங்க ஆளுநராகப் பதவி வகித்து வந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியிலிருந்து திடீரென விலகிய சூழலில் தான் தமிழ்நாடு ஆளுநராகப் பதவி வகித்து வந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்க மாநில ஆளுநராக மாற்றப்பட்டார். இதனையடுத்து ஆளுநர் ஆர்.என். ரவி, 11.03.2026 அன்று முறைப்படி தமிழ்நாட்டில் இருந்து விடைபெற்றுச் சென்றார். அப்போது ஆர்.என். ரவிக்கு அதிகாரப்பூர்வ வழியனுப்பு விழா தமிழ்நாடு அரசு சார்பில் காவல்துறையினர் மூலம் சென்னை விமான நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் ஆர்.என். ரவி, மேற்கு வங்க மாநிலத்தின் 22ஆவது ஆளுநராக 12.03.2026 அன்று பதவியேற்றுக் கொண்டார். கொல் கத்தாவில் உள்ள லோக் பவனில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு விழாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கலந்து கொண்டு ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதோடு ஆளுநர் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், அவரது மனைவி லட்சுமிக்கும் வங்காளத்தின் பாரம்பரியமான மேலாடையான உத்தரியம் அணிவித்து முதலமைச்சர் மம்தா மரியாதை செய்தார். அப்போது ஆளுநர் ரவி, “வங்காளம் இந்தியாவின் ஆன்மிக, அறிவுசார் மற்றும் கலாச்சார தலைநகரம்” என்று புகழ்ந்து பேசினார்.
இந்த பதவியேற்பு விழாவிற்குப் பின் நடைபெற்ற உரையாடலில் முதலமைச்சர் மம்தா ஆளுநர் ஆர்.என். ரவியிடம் வங்காள கலாச்சாரம் குறித்து ஆளுநரை வரவேற்றுப் பேசும் போது, “வங்காளம் மற்றும் வங்காள மக்கள் அனைத்து மொழிப் பின்னணியைச் சேர்ந்தவர்களையும் மதிக்கிறார்கள். இங்கு அனைவரும் அமைதியுடன் இணைந்து வாழ்கிறார்கள். வங்காளம் மிகவும் சிறப்பானது. வங்காளத்தின் கலாச்சாரம் முற்றிலும் மாறுபட்டது. வங்காளத்தை நேசிப்பவர்களை வங்காள மக்கள் நேசிப்பார்கள்” என்று குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பின் போது முதலமைச்சர் மம்தா மேலோட்டமாக வாழ்த்துகளைத் தெரிவித்தாலும், “வங்காளத்தை நேசிப்பவர்களையே வங்காளம் நேசிக்கும்” என்று அவர் கூறியது புதிய ஆளுநருக்கு விடுக்கப்பட்ட ஒரு நுட்பமான செய்தியாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
