சோதனையில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்
அமெரிக்கா – ஈரான் போர் பதற்றத்தால் நாடு முழுவதும் வர்த்தக எரிவாயு உருளைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனைப் பயன்படுத்தி எரிவாயு உருளைகள் பதுக்கப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், திருப்பதி அடுத்த திருச்சானூர் – எம்.ஆர்.பல்லி சாலையில் உள்ள ஒரு கிடங்கில் (குடோனில்) சிவில் சப்ளை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதிகாரிகளைக் கண்டதும் அந்த கிடங்கின் உரிமையாளர் பிரம்மா ரெட்டி தப்பியோடினார். அங்கு நடத்தப்பட்ட சோதனையில்: 585 வர்த்தக சிலிண்டர்கள் 80 வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சோதனையில் வெளிவந்த அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், அந்த கிடங்குக்கான ‘பாரத் காஸ்’ உரிமம் கடந்த 2019-ஆம் ஆண்டே காலாவதியாகிவிட்டது. இருப்பினும், கடந்த 8 ஆண்டுகளாக எந்தவித சட்டபூர்வ உரிமமும் இன்றி, ‘கோ காஸ்’ (Go Gas) என்ற பெயரில் விதிகளுக்குப் புறம்பாக திருமலைக்கு எரிவாயு உருளைகள் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளன. இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள பிரம்மா, திருப்பதி சட்டமன்ற உறுப்பினரின் வலதுகை போன்றவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிகார பலத்தைப் பயன்படுத்தி, கடந்த பல ஆண்டுகளாக முறையான உரிமம் இன்றி திருப்பதி நிர்வாகத்திற்கு எரிவாயு உருளை சப்ளை செய்யப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சாமான்ய மக்கள் எரிவாயு உருளைகளைப் பதுக்கினால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், திருப்பதி போன்ற புனிதமான இடத்தில், பக்தி வேடத்தில் பகல் கொள்ளை அடிக்கும் கும்பல் மீது இதுவரை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாதது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
