இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்மீது, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம்!
உச்சநீதிமன்றம் போன்று செயல்படவேண்டிய தேர்தல் ஆணையம்
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்களுடைய இன்னொரு பிரிவாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது!
திருவாரூர், மார்ச் 14 – ‘‘இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்மீது, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. உச்சநீதி மன்றம் போன்று செயல்படவேண்டிய தேர்தல் ஆணையம், முழுக்க முழுக்க ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்களுடைய இன்னொரு பிரிவாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது! தேர்தல் ஆணையரின்மீது நம்பிக்கை இல்லை என்று சொல்வது இதுதான் முதல் முறை’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர்
இன்று (14.3.2026) காலை, திருவாரூருக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தீர்மானம்!
செய்தியாளர்: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் மேல் நம்பிக்கை இல்லை, அவரைப் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளு மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்திருக்கி றார்களே, அதுபற்றி உங்கள் கருத்து
என்ன?
அவர் முழுக்க முழுக்க
காவி மயமாக்கப்பட்டு இருக்கிறார்!
தமிழர் தலைவர்: எஸ்.அய்.ஆர். நடவ டிக்கையின் மூலமாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தகுதி வாய்ந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதாக, மேற்கு வங்காளத்தில் மம்தா அவர்கள் ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தை முன்பு நடத்தினார். அதுதொடர்பாக வழக்குப் போட்டிருப்பதும், அதற்கு முன், உச்சநீதி மன்றத்தில் தேர்தல் நிதி சம்பந்தமாக வந்த பிரச்சினையில், தேர்தல் ஆணையம் நடந்துகொண்ட முறையும், இப்போது தொடர்ந்து எஸ்.அய்.ஆரை குறிப்பிட்ட எதிர்க்கட்சி மாநிலங்களில் மட்டுமே செய்வதெல்லாம், அவர் முழுக்க முழுக்க காவி மயமாக்கப்பட்டு இருக்கிறார் என்பதற்கான அடையாளங்கள்.
உச்சநீதிமன்றம் போன்று செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம், முழுக்க முழுக்க ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்களுடைய இன்னொரு பிரிவாக – கிளையாகத்தான் அது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதல்ல என்பதை உலகத்திற்கு அறிவிக்கின்ற தீர்மானமாகும்!
ஆகவேதான், நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தலைமைத் தேர்தல் ஆணை யரைப் பதவி நீக்கவேண்டும் என்கிற ஒரு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இந்தத் தீர்மானத்தின்மூலமாக, அவர் எப்படி நடந்துகொள்கிறார், அவருடைய நடத்தை என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதல்ல என்பதை உலகத்திற்கு அறிவித்திருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில், பா.ஜ.க.விற்கு இருக்கின்ற மெஜாரிட்டியின் பலத்தின்மூலமாக, இந்தத் தீர்மானத்தைத் தோற்கடிக்கக் கூடும். அது சாதாரணம்தான். பேரவைத் தலைவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்கிற தீர்மானம் தோல்வியடைந்தது போன்று.
தேர்தல் ஆணையரின்மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவது இதுதான் முதன்முறை!
பேரவைத் தலைவர்மீது பலமுறை நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. ஆனால், தேர்தல் ஆணையரின்மீது நம்பிக்கை இல்லை என்று சொல்வது இதுதான் முதல் முறை. நாடாளுமன்றத்தில் இது பிரதிபலிக்கிறது – இதைத்தான் மக்களும் எதிர்கொண்டிருக்கிறார்கள்.
ஏனென்றால், லட்சக்கணக்கான வாக்கா ளர்களின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டு இருக்கின்றன. நடுநிலையாக இருந்து, சுதந்திரமாகத் தேர்தலை நடத்தவேண்டிய அவருடைய கடமையை அவர் செய்யவில்லை.
கண்டிக்கவேண்டிய அய்.நா. சபை,
குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறது!
செய்தியாளர்: ஈரான் – இஸ்ரேல் போரில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்திருக்கிறார்களே, அது சம்பந்தமாக நம்முடைய பிரதமர் என்ன நடவடிக்கை எடுப்பார்?
தமிழர் தலைவர்: போரற்ற உலகை உருவாக்கவேண்டும். உயிரிழந்தவர்கள் இந்தியர்களாக இரு்நதாலும் சரி, அல்லது மற்றவர்களாக இருந்தாலும் சரி, அவை மனித உயிர்கள்தான்.
எனவே, போரற்ற ஒரு புதிய உலகு உரு வாகவேண்டும் என்று நினைக்கவேண்டுமே தவிர, வேறொன்றுமில்லை.
இதைக் கண்டிக்கவேண்டிய அய்.நா. சபை, குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின்
வெற்றிக் கூட்டணிக்கு உரமிடுவதாகும்!
செய்தியாளர்: பிரதமர் மோடி தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வருகிறாரே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: மோடி தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. ஏனென்றால், தி.மு.க.விற்கு வாக்களிப்போர் எண்ணிக்கை தொடர்ந்து பெருகிக் கொண்டே இருக்கின்ற வாய்ப்பை, அவர் தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ, புரியாமலோ அளித்துக் கொண்டிருக்கின்றார்.
எனவே, மோடியின் ஒவ்வொரு முறை வருகையும், தமிழ்நாட்டில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக் கூட்டணிக்கு உரமிடுவதாகும்.
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.
