கரூர், மார்ச் 13 தமிழ் நாட்டின் கரூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ரூ. 119 கோடியில் அமையவுள்ள 3 புதிய நியோ டைடல் பார்க் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன்மூலம் 1,800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் குறைவாக உள்ள மாவட்டங்களைக் கண்டறிந்து, அங்குத் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் காவேரி டெல்டா பகுதிகளில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்கத் தமிழ்நாடுஅரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று (12.3.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ‘நியோ டைடல் பார்க்’ அமைப்பதற்கான அடிக்கல்லை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாட்டினார்.
ரூ. 119.06 கோடி மொத்த முதலீடு செய்யப்பட்டு, இந்த 3 பூங்காக்களின் மூலம் சுமார் 1,800 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, டெல்டா பகுதிப் பெண்களுக்கு இது நல்வாய்ப்பாக அமையும். மாவட்ட வாரியான நிதி ஒதுக்கீடு; கரூருக்கு ரூ.38.50 கோடி, புதுக்கோட்டை ரூ. 36.78 கோடி, நாகப்பட்டினத்துக்கு ரூ. 43.78 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2025-2026 பொருளாதார ஆய்வறிக்கையின்படி, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் தனிநபர் வருமானத்தில் புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் கடைசி 10 இடங்களுக்குள் உள்ளன. முதலிடத்தில் உள்ள மாவட்டத்தில் தனிநபர் வருமானம் ரூ. 7.5 லட்சமாக இருக்கும் நிலையில், இந்த மாவட்டங்களில் அது ரூ. 2 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது. இந்த இடைவெளியைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த மேலும் 2 முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஜப்பானிய நிறுவனம் ஹிரோஸ் திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் ரூ. 100 கோடி முதலீட்டில் மின்னணு உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலையை அமைக்க உள்ளது. இதன் மூலம் 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அசோக் லேலண்ட் காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் ரூ. 500 கோடி முதலீட்டில் ‘பேட்டரி பேக்’ தயாரிக்கும் ஆலையை அமைக்க உள்ளது. இதன் மூலம் 200 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். இந்நிகழ்வில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
