பெங்களுரு, மார்ச்.13 மத்திய கிழக்கு பகுதியில் ஈரான்–அமெரிக்கா–இஸ்ரேல் மோதல் காரணமாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல் போக்குவரத்தை ஈரான் தடுத்து நிறுத்தியதால், இந்தியாவில் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டு, பெங்களூரு உட்பட கருநாடகத்தின் பல நகரங்களில் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த நான்கு நாட்களில் சுமார் 65% உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
பெங்களூரு உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கம், “எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ரூ.100 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்து வருகின்றனர். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தீர்வு காண வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளது. அடுத்த சில நாட்களில் எரிவாயு விநியோகம் சீராகாவிட்டால், தற்போது இயங்கும் உணவகங்களும் மூடப்படும் அபாயம் நிலவுகிறது.
