பெற்றோர் வருவாயைக் காட்டி, மாணவர்களின்
உரிமையைப் பறித்த அவலத்திற்கு முற்றுப்புள்ளி!
பெற்றோர் வருவாயைக் காட்டி, மாண வர்களின் உரிமையைப் பறித்த அவலத்திற்கு முற்றுப்புள்ளி! சமூகநீதிப் போராட்டத்தில் ‘கிரீமிலேயர்’ தொடர்பான ஒரு வரவேற்கத்தக்க திருப்புமுனைத் தீர்ப்பு என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
இரு நாள்களுக்கு முன், உச்சநீதிமன்றத்தால், ஒன்றிய அரசு Vs ரோகித்நாதன் என்ற வழக்கில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பு வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத ஒன்றை, உச்சநீதிமன்றமே (இந்திரா சஹானி வழக்கில்) புகுத்திய கிரிமீலேயர் (creamy layer) என்ற பொருளாதார அளவுகோலைத் திணித்ததன்மூலம் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்குக் கிடைக்கவேண்டிய சமூகநீதி, ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளிலும் பறிக்கப்பட்டு வந்தது.
நமது அறிவுக் கூர்மை மிக்க இளைஞர்கள், யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றாலும்கூட, அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூக அநீதி கொடி கட்டிப் பறக்கும் கொடுமை கோலோச்சி வந்தது!
கைக்கெட்டியது
வாய்க்குக் கிட்டாத அவலம்!
அதன் விளைவாக கேரளாவில், பாதிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ரோகித்நாதன், ஜி.பாபு மற்றும் பல பாதிக்கப்பட்ட நபர்கள் பணிக்குத் தேர்வான பிறகும், கைக்கெட்டியது வாய்க்குக் கிட்டாத அவலம் இருந்தது.
இவர்கள் தொடுத்த வழக்கில்தான், இந்தச் சிறப்பு மிகுந்த உச்சநீதிமன்ற அமர்வின் தீர்ப்பு, அந்த அநீதிக்குப் பரிகாரம் தேடித்தந்துள்ளது!
தேர்வில் வெற்றி பெற்றும், அதன் முழுப் பயன் கிட்டாத நிலைக்கு, நல்ல தீர்வு அளிக்கும், நல்ல தீர்ப்பாக இது அமைந்து, உரிய வழி திறந்துள்ளது!
ஒன்றிய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையும் (Department of Personnel and Training (DoPT)), சில தீர்ப்புகளும் அந்த சமூக அநீதி தொடர வேடிக்கைத்தான் பார்த்து வந்தன!
கிரிமீலேயர் என்பது பெற்றோரின் வருமானத்தை அளவுகோலாக வைத்து வடிகட்டும் கொடுமை முறை!
திராவிடர் கழகம் உச்சநீதிமன்றத்தில்
வழக்குத் தொடுக்கவும் அணியமாகிறது!
அரசியலமைப்புச் சட்டத்தில் அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்கள் மூலம் – பிற்படுத்தப்பட்டோர் என்பதைத் தெளிவாக, திட்டவட்டமாக வரையறுத்துவிட்ட பிறகு – இப்படி ஒரு ‘திணிப்பு’ – அரசியலமைப்புச் சட்டக் கூறுகளுக்கே விரோதம். (இதனடிப்படையில், அடுத்து உச்சநீதிமன்றத்தில் நீதி கேட்டு, திராவிடர் கழகம் வழக்குத் தொடுக்கவும் அணியமாகிறது).
அரசியலமைப்புச் சட்டத்திற்கு
விரோதமான ஒன்று!
பெற்றோரின் வருமானத்தை மட்டுமே அடிப்ப டையாகக் கொண்டு தேர்வானவர்களின் உரிமை மறுக்கப்படுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான ஒன்று என்று உச்சநீதிமன்றத்தின் அமர்வு (ஜஸ்டிஸ் பாமிதிகாந்தம் சிறீ நரசிம்மா, ஜஸ்டிஸ் ஆர்.மகாதேவன் ஆகியோர்) தீர்ப்பளித்துள்ளது.
1993 ஆம் ஆண்டு அரசின் கொள்கைப் (Policy)படி, வருமான அடிப்படையைக் கொண்டது.
பெற்றோரின் வருமானத்தைக் கணக்கிடுவதிலும் சரியான நிலைப்பாட்டை, ஒன்றிய அரசின் ஊழியர் நியமனத் துறையோ, மற்ற வழக்காடிகளோ கவனம் செலுத்தாத நிலையில், தேவையற்ற ஒன்றை அடிப்ப டையாகக் கொள்வது ஏற்புடையதல்ல என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது.
சமூகநீதிக்குச் சரியான வெளிச்சம் பாய்ச்சியுள்ள தீர்ப்பு!
சமூகநீதியின்படி வெற்றி பெற்ற நபர்கள் அப் பதவிகளில் அமர்ந்து, தங்களது உழைப்பு, உரிமையைப் பெற இந்த முக்கியத் தீர்ப்பு வழிவகை செய்திடும்.
சமூகநீதிக்குச் சரியான வெளிச்சம் பாய்ச்சியுள்ள இந்தத் தீர்ப்பு, சமூகநீதி வரலாற்றிலும் பெரும் திருப்பு முனையாக அமையும் என்பதில் அய்யமில்லை.
அரசியலமைப்புச் சட்ட விதிகள்படி நடக்கவேண்டிய அவசியத்தை ஒன்றிய அரசுக்கும், மற்ற மற்ற அமைப்பு களுக்கும் புரிய வைத்து, விழி திறக்கும் வித்தகத் தீர்ப்பு இது!
இட ஒதுக்கீட்டை மறைமுகமாகப் பறித்த நடைமுறைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த மற்றொரு தீர்ப்பு!
இதுபோல, சில வாரங்களுக்கு முன்புகூட, திறந்த போட்டியில், ‘மெரிட்’ அடிப்படையில் தேர்வானவர்களைத் திட்டமிட்டே கோட்டாவுக்குள் கொண்டு வந்து, 27 சதவிகிதத்தினைத் தவறான ‘நிரவல்’ கணக்காக்கி செய்து வந்த நடைமுறைகளும் சரியல்ல. பொதுப் போட்டி தனி, இட ஒதுக்கீடுமூலம் பெறுவது தனி. இரண்டையும் இணைத்து, ஓ.பி.சி. கோட்டாவை மறைமுகமாகப் பறித்த நடைமுறைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த தீர்ப்பையும் நாம் வரவேற்றுப் பாராட்டியிருந்தோம்.
விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியம்!
எப்போதும் விழிப்புடன் இருந்து, களப் போராளி யாகவே இருந்தால், நம்முடைய உரிமைகள் நமக்குக் கிடைக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
13.3.2026
