குடியேற்றம், மார்ச் 12– வேலூர் மாவட்டம் குடியேற்றம், போடிப்பேட்டை சாலையில் உள்ள பெரியார் அரங்கத்தில் அன்புமொழி இல்லத்தின் சார்பில் திராவிடர் கழக மகளிர் அணி மாநில துணைச் செயலாளர் ந.தேன்மொழி எழுதிய “சம்மட்டி”கவிதை நூல் திறனாய்வு வேலூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் வி.இ. சிவக் குமார் தலைமையில் நடைபெற்றது.
மென்பொறியாளர் ஓவியா அன்புமொழி அனைவரையும் வரவேற்றார். வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தி இணைப்புரை வழங்கினார். வேலூர் மாவட்ட கழக செயலாளர் உ.விசுவநாதன், பொதுக் குழு உறுப்பினர் சி.லதா, மாவட்ட மகளிர் அணிது தலைவர் இரா.ராஜகுமாரி, வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் க.பரமசிவம், மாவட்ட கழக துணைச் செயலாளர் மு.சீனிவாசன், நகர கழக அமைப்பாளர் வி.மோகன், அணைக்கட்டு கழக அமைப்பாளர் பொ.ரவீந்திரன், வேலூர் மாநகர பகுத்தறிவாளர் கழக தலைவர் கே.எஸ்.அஸ்ரப், கழக மகளிர் அணியைச் சேர்ந்த கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் மாவட்ட கழக காப்பாளர் வி.சடகோபன், மூத்த வழக்குரைஞர் சு.சம்பத்குமார், குடியேற்றம் தமிழியக்கம் செயலாளர் ஜெ.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் நீதிமணி, தாம்பரம் மாவட்ட கழக மகளிர் பாசறை செயலாளர் இரா.சு.உத்ரா, செங்கல்பட்டு மாவட்ட கழக மகளிர் அணித் தலைவர் சா.நூர் ஜஹான், வேலூர் மாவட்ட கழக மேனாள் காப்பாளர் ச.ஈஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன்பரசன் இந்நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் அன்பு மொழி இல்லத்தின் சார்பில் பயனாடை அணிவித்து புத்தகம் வழங்கினார். புத்தகத் திறனாய்வு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் தேவ.நர்மதா ஆற்றிய உரையில், இன்று மகளிர் நாளை முன்னிட்டு தோழர் ந.தேன்மொழி எழுதிய “சம்மட்டி” கவிதை நூல் திறனாய்வு செய்வது மகிழ்ச்சிக்கு உரியதாகும். இந்த நூல் ஆணாதிக்கத்திற்கும், ஸநாதன ஆதிக்கத்திற்கும் தமது எழுத்துகள் மூலம் சம்மட்டியால் ஓங்கி அடித்துள்ளார் நம் எழுத்தாளர். காலம் காலமாக பெண்கள் சந்தித்து வரும் இன்னல் களை துணிச்சலாக தம் எழுத்துகள் மூலம் வெளிப்படுத்தி உள்ள எழுத்தாளருக்கு வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தந்தை பெரியார் அவர்களும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும் பெண்கள் அனைத்துத் துறையிலும் சாதிக்க வேண்டும் என்று விரும்பினர். அந்த அடிப்படையில் இங்கு கூடியிருக்கும் பெண்கள் துணிச்சலாக தான் விரும்பும் துறையில் சாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் ஏற்புரை வழங்கிய எழுத்தாளர் ந.தேன்மொழி திருமணத்திற்குப் பிறகு மற்ற பெண்களைப் போலவே நானும் குடும்ப பராமரிப்புப் பணியில் ஈடுபட்டேன். எனது இணையர் இர.அன்பரசன் நமது திராவிடர் கழக இயக்கத்தைப் பற்றியும் கொள்கை பற்றியும் என்னிடம் விவாதிப்பார். தந்தை பெரியார் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோர் பெண்கள் ஆணாதிக்க அடிமையிலிருந்து விடுபட்டு சுய பொருளாதார சார்போடு வாழ்வதற்கு பாடுபட்டதை புத்தகம் வழியாகவும் இயக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்று தெரிந்து கொண்டதன் விளைவாக – இன்று நான்கு புத்தகங்களை எழுதி, வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் உள்ளிட்ட ஏராளமானவர்களின் பாராட்டுகளையும் அன்பையும் பெற்று இருக்கிறேன். என்று குறிப்பிட்டார். புத்தகத் திறனாய்வு முடிவில் மின் பொறியாளர் இ.மோகன்ராஜ் நன்றி உரையாற்றினார்.
திராவிடர் கழகம் பகுத்தறிவாளர் கழகம், மகளிர் அணி, மகளிர் பாசறை மற்றும் அப் பகுதி மக்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.
